கயிறுக்கு ஆர்டர் கொடுத்தாச்சி.. அப்ப நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு விரைவில் தூக்கு?
Recommended Video
பாட்னா: பீகாரில் உள்ள பக்ஸார் சிறையில் 10 தூக்கு கயிறுகளை செய்து தருமாறு ஆர்டர் கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கு விரைவில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிகிறது.
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து நிர்பயா பலாத்கார வழக்கில் ஈடுபட்ட 4 பேரையும் உடனடியாக தூக்கிலிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இந்த நிலையில் இவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதால் இவர்களுக்கு அடுத்த மாதம் தூக்குத் தண்டணை நிறைவேற்றப்படும் என தெரிகிறது. ஆனால் இவர்களை தூக்கிலிட ஹேங்க்மேன்தான் இல்லை என கூறப்பட்டது.
தூக்கு கயிறு
இந்த நிலையில் ஹேங்க்மேன் பணிக்கு தான் தயார் என ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுபாஷ் சீனிவாசன் என்பவர் திகார் சிறைத் துறைக்கு மனு அனுப்பியுள்ளார். பல்வேறு மாநில சிறைத்துறை சார்பில் 10 தூக்கு கயிறுகளை வரும் 14-ஆம் தேதிக்குள் கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
நீண்ட நாட்கள்
பக்ஸார் சிறையில்தான் அதிகமாக தூக்குக் கயிறுகள் தயாரிக்கப்படுகின்றன. இங்கு தயாராகும் தூக்கு கயிற்றை உடனடியாக பயன்படுத்த வேண்டும். நீண்ட நாட்களுக்கு பாதுகாப்பாக வைத்து பயன்படுத்த முடியாது.
10 கயிறுகள்
இந்த கயிற்றை தயாரிக்க 3 நாட்கள் தேவைப்படும். அதில் இயந்திரங்களின் பயன்பாடு இல்லாமல் மனிதர்களைக் கொண்டே தயாரிக்கப்படுகிறது. கடந்த முறை இங்கிருந்து பெறப்பட்ட ஒரு கயிற்றின் விலை ரூ 1,725 ஆகும். இதுகுறித்து பக்ஸார் சிறைத் துறை கண்காணிப்பாளர் விஜய்குமார் அரோரா கூறுகையில் வரும் 14-ஆம் தேதிக்குள் 10 தூக்கு கயிறுகளை தயார் செய்து தருமாறு சிறைத் துறை இயக்குநரிடம் இருந்து கடந்த வாரம் உத்தரவு கிடைக்கப்பெற்றுள்ளது.
4 கயிறு திகாருக்கா?
இவை எந்த சிறைகளில் பயன்படுத்த போகிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை என்றார். 10 தூக்கு கயிறுகளில் 4 கயிறுகளை திகார் சிறை ஆர்டர் செய்திருக்கலாம் என தெரிகிறது. இதன் மூலம் 2012-ஆம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேருக்கும் தூக்கு தண்டனை விரைவில் நிறைவேற்றப்படலாம் என தெரிகிறது.