கோவிலில் கடும் கூட்ட நெரிசல்.. 9 பெண்கள் துடிதுடித்து பலி.. பீகார் வழிபாட்டில் அடுத்தடுத்து பலி
பாட்னா: பீகாரின் நாளந்தா மாவட்டத்தில் உள்ள மா ஷீத்லா கோவிலில் இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது அளவுக்கு அதிகமாக பக்தர்கள் கூடினர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பெண்கள் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் தீப் நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் மா ஷீத்லா கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மார்ச், ஏப்ரல் மாதத்தின் இடைப்பட்ட காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சைத்ரா மாதம் வருகிறது.

இந்த சைத்ரா மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமை இன்று வந்தது. இது மிகவும் விசேஷமானது. இந்நிலையில் தான் இன்று மா ஷீத்லா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
கூட்ட நெரிசலில் 9 பேர் பலி
எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகளவில் பக்தர்கள் குவிந்தனர். இதனால் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் ஏராளமான பெண்கள் சிக்கினர். மொத்தம் 9 பெண்கள் பலியாகினர். 12 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கூட்ட நெரிசல் எப்படி ஏற்பட்டது?
இதுபற்றி அங்கிருந்த பக்தர்கள் கூறுகையில், ''கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இடநெருக்கடி ஏற்பட்டது. பக்தர்கள் பயந்துப்போனபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பலரும் தப்பித்து வெளியே ஓடி வர முயன்றனர். இதுதான் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாகும்'' என்றனர். இருப்பினும் கூட்ட நெரிசலுக்கு என்ன காரணம்? என்பது தெரியவில்லை. இருப்பினும் சிறப்பு வழிபாடையொட்டி பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் பிரதான காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது. இதுபற்றி போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் சஸ்பெண்ட்
மேலும் முதற்கட்டமாக தீப் நகர் போலீஸ் நிலையத்தில் ஸ்டேஷன் ஹவுஸ் ஆபீசர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும் சம்பவத்துக்கு உண்மையான காரணம் பற்றி அறிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக போலீசார் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவிலில் வழிபாடு நடத்த வந்தவர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பீகாரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications