இதனால் சகலமானவர்களுக்கும்... ஜாதிவாரி கணக்கெடுப்பு முடித்துவிட்டோம்: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்
பாட்னா: பீகார் மாநில அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டுவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். நாட்டின் இதர மாநிலங்களும் இதனைப் பின்பற்ற வேண்டும் எனவும் நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாடு விடுதலைக்கு முன்பாக ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில்தான் இன்றளவும் இடஒதுக்கீடு உள்ளிட்டவை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் அந்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. கடந்த 9 ஆண்டுகளாக மத்திய பாஜக அரசும் காங்கிரஸ் அரசின் இந்த புள்ளி விவரங்களில் குழப்பம் இருக்கிறது என கூறி வருகிறது.
இதனிடையே பீகார் மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு முதல்வர் நிதிஷ்குமார் உத்தரவிட்டிருந்தார். இதற்கு அம்மாநில அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்திருந்தன. மத்திய அரசும் இதேபோல ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி இருந்தனர். மேலும் பீகார் அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடவடிக்கைக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் பீகார அரசுக்கு சாதகமாகவே தீர்ப்புகள் கிடைத்தன.
இந்நிலையில் இன்று பாட்னாவில் செய்தியாளர்களிட ம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவடைந்துவிட்டது. விரைவில் இந்த புள்ளி விவரங்கள் வெளியிடப்படும். இதனடிப்படையில் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் இதர மாநிலங்களும் இதனைப் பின்பற்றலாம் என்றார்.
மேலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் மத்தியில் ஆளும் அரசுதான் கனத்த மவுனத்துடன் இருக்கிறது எனவும் நிதிஷ்குமார் விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications