"பாஜக ஒரு யானை".. அனைவரும் சேர்ந்தால்தான் வீழ்த்த முடியும்.. நிதீஷ் குமார் 'ஓபன் டாக்'
பாட்னா: "பாஜக ஒரு பெரிய யானை.. எனவே அனைவரும் சேர்ந்து எதிர்த்து சண்டையிட்டால் மட்டுமே அதனை வீழ்த்த முடியும்" என்று பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான நிதீஷ் குமார் கூறினார்.
எதிர்வரும் மக்களவைத் தேர்தல் எதிர்க்கட்சிகள் அனைத்துக்குமே வாழ்வா சாவா தேர்தல் எனக் கூறிய நிதீஷ் குமார், நம் பலத்தை காட்டுவதற்கு இதுவே சரியான தருணம் என்றும் அவர் அறைக்கூவல் விடுத்துள்ளார்.
பாஜக நம்பத்தகுந்த கட்சி அல்ல.. கூட்டணியில் இருக்கும் போதே எங்கள் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்த கட்சி என்றும் நிதீஷ் குமார் குற்றம்சாட்டினார்.

மூன்றாம் அணி முயற்சி
எதிர்வரும் 2024 மக்களவைத் தேர்தலை நினைத்து பாஜக பயப்படுகிறதோ இல்லையோ, எதிர்க்கட்சிகள் தான் பதற்றமாக காணப்படுகின்றன. வட மாநிலங்களில் அசுர பலத்துடன் நிற்கும் பாஜகவை காங்கிரஸ் தனியாக நின்று வீழ்த்துவது முடியாத காரியம் என்பது சிறு குழந்தைக்கு கூட தெரிந்த ஒன்று. எனவேதான், எதிர்க்கட்சிகளை ஒரே அணியில் திரட்டும் முயற்சியில் பெரிய கட்சிகளின் தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் நிதீஷ் குமார்.

பிரதமர் கனவு இல்லை
நிதீஷ் குமாரும் தன் பங்குக்கு பல எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து பேசிக் கொண்டுதான் இருக்கிறார். ஆனால் அவரது முயற்சிகள் பெரிய அளவில் பலன் கொடுக்கவில்லை. நிதீஷ் குமார் நம்மை பயன்படுத்தி பிரதமராக முயற்சிக்கிறாரோ என்ற எண்ணம் எதிர்க்கட்சித் தலைவர்கள் இடையே பரவலாக உள்ளது. இதை கேள்விப்பட்ட நிதீஷ் குமாரும், தனக்கு பிரதமராகும் ஆசையெல்லாம் இல்லை. பாஜகவை வீழ்த்தவே இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.

வாழ்வா சாவா தேர்தல்
இந்நிலையில், பீகாரில் அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தோல்வி அடைந்தது. அங்கு பாஜக வெற்றி பெற்றது. இதனால் நிதீஷ் குமார் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், நிதீஷ் குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "எதிர்வரும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நாட்டில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளுக்குமே வாழ்வா சாவா தேர்தலாகவே இருக்கப் போகிறது. நாட்டின் நலனுக்காக இந்த தேர்தலில் பாஜகவை நாம் தோற்கடித்தே ஆக வேண்டும்.

மூன்றாம் அணியாக இருக்கக்கூடாது
ஆனால், அது அவ்வளவு எளிதானது அல்ல. பாஜக ஒரு யானையை போன்றது. அதை தனித்தனியாக நின்று தோற்கடிக்க முடியாது. அனைவரும் சேர்ந்து நின்று சண்டையிட்டால் தான் பாஜகவை வீழ்த்த முடியும். இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரு அணியில் நிற்க வேண்டும். அது மூன்றாவது அணியாக இருக்கக் கூடாது. பிரதான அணியாக இருக்க வேண்டும். இதை சாத்தியமாக்குவதற்குதான் நான் முயற்சித்து வருகிறேன். பாஜக நம்பத்தகுந்த கட்சி கிடையாது. அது கூட்டணியில் இருக்கும் கட்சியையே வீழ்த்த முயற்சிக்கும். 2020 சட்டமன்றத் தேர்தலில் எங்களுடன் கூட்டணியில் இருந்துகொண்டே எங்கள் கட்சி வேட்பாளர்களை தோற்கடிக்க உள்ளடி வேலை பார்த்த கட்சி பாஜக. இவ்வாறு நிதீஷ் குமார் கூறினார்.












Click it and Unblock the Notifications