‛‛எழுதி கூட தரேன்’’.. பீகாரில் பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது.. பிரசாந்த் கிஷோர் குண்டு
பாட்னா: ‛‛பீகாரில் புதிதாக அமைந்துள்ள பாஜக-ஜேடியூ கூட்டணி ஓராண்டு கூட நிலைக்காது. இதனை நான் எழுதி கூட தருகிறேன்'' என தேர்தல் வியூக வகுப்பாளரும், தேர்தல் வியூக வகுப்பாளருமான பிரசாந்த் கிஷோர் பரபரப்பாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பீகாரில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. பீகாரில் நிதிஷ் குமாரின் ஜேடியூ, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தன.

பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இருந்த நிலையில் துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் இருந்தார். இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நிதிஷ் குமார் அந்த கூட்டணியை விட்டு வெளியேறியுள்ளார்.
தற்போது நிதிஷ் குமார் மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்துள்ளார். இன்று காலையில் நிதிஷ் குமார் பீகார் ஆளுநரிடம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் வழங்கினார். மேலும் பாஜக ஆதரவுடன் புதிதாக ஆட்சியமைக்கவும் உரிமை கோரினார். இதன்மூலம் பீகாரில் நடந்து வந்த ஜேடியூ, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் கூட்டணி முடிவுக்கு வந்துள்ளது.
இன்று மாலையில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக உள்ளார். அவருடன் 8 பேர் பதவியேற்க உள்ளனர். இதில் 2 பேர் துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளனர். பாஜகவின் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதல்வராக உள்ளனர். 6 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
இந்நிலையில் தான் பீகாரில் நடந்த அரசியல் மாற்றம் குறித்து தேர்தல் வியூக வகுப்பாளரும், பீகாரை சேர்ந்தவருமான பிரசாந்த் கிஷோர் இன்று கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி தற்போது புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாஜக-ஜேடியூ கூட்டணி பீகாரில் நீடிக்காது. விரைவில் இந்த கூட்டணி உடைந்துவிடும் என தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:
பீகாரில் புதிதாக மீண்டும் பாஜக-ஜேடியூ கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணி என்பது 2025ம் ஆண்டு நடைபெற உள்ள பீகார் சட்டசபை தேர்தல் வரை நீடிக்காது. அதாவது ஓராண்டு அல்லது அதற்கு முன்பாகவே முடிவுக்கு வந்துவிடும். தற்போது நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியின் முககமாக அறியப்படுகிறார். மேலும் பாஜகவின் ஆதரவு பெற்ற தலைவராக இருக்கிறார். இருப்பினும் இந்த கூட்டணி என்பது நிலைக்காது. இதனை நான் எழுதி தருகிறேன்'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications