திடீர்னு என்னாச்சு.. முதல்வராவதில் நிதிஷுக்கு விருப்பமில்லையா.. பாஜக தலைவர்கள் சொல்வது என்ன..?
நிதிஷ்குமார் முதல்வர் பொறுப்பை ஏற்பாரா என்பதில் சந்தேகம் எழுந்து வருகிறது
பாட்னா: தீபாவளி முடிந்தபிறகு, நிதிஷ்குமார் பீகார் மாநில முதல்வராக பதவியேற்பார் என்று பாஜக தலைவர்கள் உறுதி தந்து வருகிறார்கள்.. இருந்தாலும் நிதிஷ் முதல்வர் பதவியை ஏற்பதில் தயக்கம் காட்டுவதாகவும் சில செய்திகள் கசிந்து வருகின்றன!
இந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் மெகா கூட்டணி கடுமையான போட்டியை ஏற்படுத்தி சவாலாக அமைந்தது... பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதாதளத்துக்கு எதிராக சிராக் பஸ்வான் தனது லோக்ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர்களை களமிறக்கியது அதைவிட சவாலாக அமைந்தது.
இதனிடையே, முஸ்லிம் ஓட்டுகளை குறிவைத்து ஒவைசி தனது ஏஐஎம்ஐஎம் கட்சியை களம் இறக்கியது அதைவிட சவாலாக அமைந்தது.. அதைவிட, அந்த கட்சி 5 இடங்களில் வெற்றி பெற்று எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ஷாக் கொடுத்துள்ளது. அதைவிட சவாலாக அமைந்தது.
மாப்பிள்ளை நிதீஷ்தான்.. ஆனால் ஆட்சி நடத்த போவது இவங்கதான்... கலகலக்க போகும் பீகார்!
பாஜக கூட்டணி
இதற்கு நடுவில், நிதிஷ்குமாரின் 15 வருஷ கால ஆட்சிக்கு எதிரான அலை இன்னொரு பக்கம் வீசியது அதையும்விட சவாலாக அமைந்தது.. இப்படி தனக்கு முன்னால் வரிசைகட்டி நின்ற, அடுத்தடுத்த சவால்களையெல்லாம் முறியடித்துதான், பாஜக கூட்டணி இன்று வென்றுள்ளது. ஆனால், நிதிஷ்தான் அடுத்த முதல்வர் ஆவாரா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.. நிதிஷ்குமார்தான் அடுத்த முதல்வர் என்று ஏற்கனவே பிரதமரும், ஜேபி நட்டாவும் உறுதியாக சொல்லிவிட்டாலும், ஏதோ இதில் திடீர் சந்தேகங்கள் எழுந்தபடியே உள்ளன.
பலம்
நிதிஷ் குமாரை பொறுத்தமட்டில் பெரிதான ஊழல் குற்றச்சாட்டு எதுவும் அவருக்கு எதிராக எழுந்தது இல்லை.. இது ஒன்றுதான் அவருக்கு இப்போதைய பலம்.. அதேசமயம், நிதிஷ் குமாருக்கு இந்த முறை ஆட்சி நடத்துவது ரொம்பவும் கஷ்டமாக இருக்கும் என்பது மட்டும் தெரிகிறது.. பாஜகவை விட குறைவான இடங்களிலேயே அவரது கட்சி வெற்றி பெற்றிருக்கிறது.
சிம்ம சொப்பனம்
அதனால், எப்படியும் பாஜகதான் முக்கிய இடத்தை பிடிக்கும்.. அதேசமயம், தனிப்பெரும் கட்சியாக வந்துள்ள ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியை சட்டசபையில் எதிர்கொள்வது நிதிஷூக்கு சிம்ம சொப்பனமாக அமையும் என்றே தெரிகிறது. நிதிஷ் குமார் பதவி ஏற்பு குறித்து அவரது ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கேசி தியாகி சொல்லும்போது, "பீகாரில் தீபாவளி பண்டிகைக்கு பின்னர் நிதிஷ் குமார் முதல்வராக பதவி ஏற்பார்" என்று சொல்லி உள்ளார்.
பாஜக கூட்டணி
அதேபோல, பாஜக கூட்டணியில் உள்ள எச்ஏஎம்எஸ் கட்சித்தலைவர் ஜித்தன்ராம் மஞ்சி சொல்லும்போது, "நிதிஷ்குமார் தலைமையின் கீழ் பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. அதனால் நிதிஷ்குமார்தான் முதல்வர் என்று பாஜக ஏற்கனவே சொல்லிவிட்டது என்று கூறியுள்ளார். பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வாலும் இதை உறுதி செய்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, "பாஜக கூட்டணிக்கு மக்கள் வழங்கிய பெரும்பான்மைக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்.. பிரதமர் மோடி அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கிறேன்" என்று நிதிஷ்குமாரும் தன்னுடைய ட்விட்டரில் நன்றியை உதிர்த்துள்ளார்.
ஒப்புக் கொள்வாரா?
என்னதான் நிதிஷ்குமார் அடுத்த முதல்வர் என்று பாஜக தரப்பில் இன்னமும் சொல்லப்பட்டாலும், முதல்வர் பொறுப்பை ஏற்க நிதிஷ் ஒப்புக் கொள்வாரா என்ற சந்தேகமும் நம்மிடையே எழுந்து வருகிறது.. இதற்கு காரணம், சிராக் பஸ்வான் ஐக்கிய ஜனதா தளத்தின் வெற்றியை பறித்துவிட்டதாக நிதிஷ்குமார் அதிர்ச்சியில் உள்ளாராம். அதிலும் 30 முக்கிய தொகுதிளின் வெற்றியை பறிகொடுத்துள்ளதை நிதிஷால் இன்னும் ஜீரணிக்கவே முடியவில்லை.
தோல்வி
அதுமட்டுமல்ல, தன்னுடைய அமைச்சரவையில் உள்ள 6 முக்கியமான அமைச்சர்களின் தோல்வியால் அப்செட்டில் உள்ளார் நிதிஷ்குமார்.. அதனால் ரிசல்ட் வெளியான பிறகு தன்னை சந்திக்க வந்த பாஜக குழுவினரிடம் முதலமைச்சர் பதவியை ஏற்பதில் சற்று தயக்கமாக இருப்பதாகவும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக ஒரு தகவல் கசிந்தது.
முழு சுதந்திரம்
அதுமட்டுமல்ல, மெஜாரிட்டியோடு பாஜக இருப்பதால், நாளைக்கு தமக்கு முழு சுதந்திரம் ஆட்சியில் இருக்குமா? அல்லது தலையீடுகள் நிறைய இருக்குமா என்றும் நிதிஷ் யோசினையில் இருப்பதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே, நிதிஷைவிட டபுள் மடங்கு வெற்றியை பெற்றுள்ள பாஜக, முக்கியமான இலாக்காக்களை குறி வைத்து வருகிறது.
முக்கிய இலாக்காக்கள்
அதாவது நிதிஷ்குமாரிடம் இருந்த உள் துறை, பணியாளர் துறை போன்ற துறைகளை கேட்டு வருவதாகவும் தெரிகிறது.. உள்துறையை தந்துவிட்டால், பிறகு எதற்கு முதல்வர் பதவி என்பதுதான் நிதிஷின் ஆதரவாளர்களின் ஆதங்கம். எனவே இப்படி பலதரப்பட்ட யூகங்கள், சந்தேகங்கள், அனுமானங்கள் இன்னமும் பீகார் மாநில அரசியலை சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கின்றன.
எதிர்பார்ப்பு
இதெல்லாம் களையப்பட்டு, கூட்டணிக்குள் குழப்பங்கள் நீங்கி.. ஒருங்கிணைப்புக்கூடி.. அதிருப்திகள் தகர்க்கப்பட்டு நிதிஷ் மறுபடியும் முதல்வர் ஆவாரா என்ற எதிர்பார்ப்பு கூடி வருகிறது.. எதுவாக இருந்தாலும் தீபாவளி முடிந்ததும் நமக்கு தெரிந்துவிடும் என்றாலும், ஒருவேளை முதல்வராக நிதிஷ்குமாரே இருந்தாலும்.. பாஜகவின் கையே இனிவரும் காலங்களில் பீகாரில் ஓங்கி வரும் என்பதை மறுக்க முடியாது.