சுந்தரா டிராவல்ஸ் பஸ்சை விட மோசம்.. ஓடிக்கொண்டிருந்தபோதே 2 துண்டாக பிரிந்த ரயில்.. அலறிய பயணிகள்!
பாட்னா: ஓடிக்கொண்டிருக்கும் போதே பயணிகளோடு சென்றுகொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இரண்டு பாதிகளாக பிரிந்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் அருகே தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்த ரயிலில் 13 மற்றும் 14வது பெட்டியில் இருந்த இணைப்பு பிரிந்து இரு பாதிகளாக பிரிந்தது. இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
பயணிகள் பஸ்களில் செல்வதை விட ரயில் பயணத்தை தான் அதிகம் விரும்புகிறார்கள். ரயில் போக்குவரத்தை மேம்படுத்த ரயில்வேயும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோல் பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் தண்டவாளத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. எனினும் சில சமயங்களில் எதிர்பாராதவிதமாக ரயில் விபத்துகள் ஏற்பட்டு விடுகின்றன.

இந்த நிலையில் இன்று காலை எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பாதியாக பிரிந்து சென்றது பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் ஒரு பாதி அப்படியே தண்டவாளத்தில் நிற்க மற்ற பெட்டிகள் இன்ஜினோடு சென்றது. இது பற்றி தெரிந்தது உடனே ரயில் லோகோ பைலட் ரயிலை நிறுத்தினார். எனினும் இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.
தலைநகர் டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்கு மக்த் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளோடு சென்றுகொண்டிருந்தது. ரயிலானது பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டத்தில் உள்ள டுவினிகஞ்ச் - ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தது. அப்போது காலை 11.08 மணி அளவில் ரயிலின் ஒரு பாதி அப்படியே பிரிந்தது. இதனால் உள்ளே இருந்த பயணிகள் திடீரென அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதையடுத்து லோகோ பைலட்டும் உடனடியாக ரயிலை நிறுத்தினார். தண்டவாளத்தில் இரண்டு பாதியாக ரயில் நின்றுகொண்டிருந்தது. இதனால் பயணிகள் சிலர் ரயில் விபத்தில் சிக்கியதை பார்த்து அச்சத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதன் காரணமாக அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பயணிகள் சிலர் தண்டவாளத்தில் இறங்கி நின்று பார்த்துக்கொண்டிருந்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து கிழக்கு மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி (சிபிஆர்ஓ) சஸ்வதி சந்திரா கூறுகையில், டெல்லியில் இருந்து இஸ்லாம்பூருக்குச் சென்ற மகத் எக்ஸ்பிரஸ் ( வண்டி எண் - 20802) ரயிலின் இணைப்பு உடைந்து இரண்டாக பிரிந்தது. பீகார் மாநிலத்தின் பக்சர் மாவட்டம், டுவினிகஞ்ச் - ரகுநாத்பூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து நடந்தது. ரயிலின் 13வது பெட்டி எஸ் - 7 மற்றும் 14 வது பெட்டியான எஸ் - 6க்கும் இடையே இருந்த இணைப்பு உடைந்தது.
விபத்து பற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக மீட்பு குழு மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் ரயில் பெட்டியினை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்து எப்படி நடந்தது? என்பது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றார். ரயில் விபத்து காரணமாக அந்த வழித்தடத்தில் 2 மணி நேரத்திற்கு மேலாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழித்தடத்தில் இயங்கும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டன.












Click it and Unblock the Notifications