பீகார்: கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை தகனம் செய்ய பணமில்லை... ஆற்றில் வீசப்பட்ட அவலம்
பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தில் சவுரா ஆற்றின் கரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடல் வீசப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
பாட்னா: பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் மாவட்டத்தில் சவுரா ஆற்றின் கரையில் ஒரு கோவிட் -19 பாதிக்கப்பட்டவரின் உடல் வீசப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்து தகனம் செய்ய பணமில்லாத காரணத்தால் உடலை ஆற்றில் வீசியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு 4 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 4 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். பீகார் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பீகாரில் முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று மாநில அரசுக்கு பாட்னா உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இதை தொடர்ந்து பீகாரில் மே மாதம் 15 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்.
இதனிடையே கதிஹார் மாவட்டத்தில் சவுரா ஆற்றின் கரையில் ஒரு கோவிட் -19 பாதிக்கப்பட்டவரின் உடல் வீசப்படும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து கதிஹார் மாவட்ட மாஜிஸ்திரேட் உதயன் மிஸ்ரா வீடியோ குறித்து விசாரணை மேற்கொண்டு அது உண்மை என்று கண்டறிந்துள்ளார். இந்த சம்பவம் மே 7 ஆம் தேதி நடந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த கதிஹார் நகர மாஜிஸ்திரேட் உதயன் மிஸ்ரா, எஸ்.டி.ஓ மற்றும் எஸ்.டி.பி.ஓ தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது, பின்னர் அவர் ஞாயிற்றுக்கிழமை பெரியா ரஹிகா கிராமத்திற்கு விஜயம் செய்தார்.
விசாரணையின் போது, அந்த நபர் மே 6 அன்று கோவிட் இறந்தார் என்பது கண்டறியப்பட்டது. உயரிழந்த நபர் கூலித்தொழில் செய்த வந்தார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சதர் மருத்துவமனையில் கடந்த 6ஆம் தேதி உயிரிழந்தார். இதன் பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அவரது உடலை ஆம்புலன்சில் உடலை மே 7 அன்று கிராமத்திற்கு அனுப்பியது.
ஆம்புலன்ஸ் டிரைவர் விஷ்ணு ஜா மற்றும் மருத்துவமனையின் பிற ஊழியர்களால் சடலம் வீசப்பட்டதாக எழுந்த புகாரை மாஜிஸ்திரேட் உதயன் மிஸ்ரா மறுத்துள்ளார்.
உயிரிழந்த நபரின் உடலை தகனம் செய்ய உறவினர்களிடம் போதுமான பணம் இல்லை. மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவரின் தகனம் மற்றவர்களுக்கு ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது என்று கிராமவாசிகள் குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். எனவே, உடலை அடக்கம் செய்வதற்காக அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் 8 அடி ஆழத்தில் குழி தோண்டினர், என்று மிஸ்ரா கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் இந்த சம்பவம் குறித்து நாங்கள் குறுக்கு விசாரணை செய்தோம். அடக்கம் செய்யும் போது, சில பார்வையாளர்கள் அதை படமாக்கி சமூக வலைப்பின்னல் தளங்களில் வைரல் செய்தனர் என்று மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவரின் மகனிடம் விசாரணை செய்த போது கொரோனா நோயாளியின் கடைசி சடங்குகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்துகிறது என்பதை குடும்பம் அறிந்திருக்கவில்லை என்றும் அதனால்தான் அவர்கள் உடலை அடக்கம் செய்ய முடிவு செய்தார்கள் என்றும் மாஜிஸ்திரேட் தெரிவித்துள்ளார்.
குடும்ப உறுப்பினர்களின் சம்மதம் மற்றும் கோவிட் -19 வழிகாட்டுதல்களின்படி உடல் அடக்கம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார். கோவிட் -19 பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு அறிவித்தபடி குடும்பத்திற்கு ரூ .4 லட்சம் இழப்பீடு கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.