முந்தைய நாள் பார்ட்டி..திருமணத்தையே மறந்து மட்டையான மாப்பிள்ளை..மணமகள் முடிவால் குடும்பத்தினர் ஷாக்
திருமணத்திற்கு முந்தைய நாள் மது குடித்து விட்டு மறுநாள் திருமணத்தையே மணமகன் மறந்து போன நிகழ்வு பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
பாட்னா: திருமணத்திற்கு முந்தைய நாள் மது குடித்து விட்டு மறுநாள் திருமணத்தையே மணமகன் மறந்து போன நிகழ்வு பீகார் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. மணமகன் போதை தெளிந்த பிறகு திருமணம் செய்ய தயராக இருந்தாலும் மணமகள் திருமணத்தை நிறுத்தியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்த விவரத்தை இங்கே காணலாம்.
மதுபோதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வதை மறந்து விடுவது.. அல்லது போகும் வழியில் மட்டையாகி கையில் இருந்த பொருட்களை எல்லாம் பறிகொடுத்து அய்யோ என பதறி நிற்பது போன்ற நிகழ்வுகளை அவ்வப்போது கேள்வி பட்டு இருப்போம்.
ஆனால் இதைவிட திருமணத்திற்கு முந்தைய நாள் பார்ட்டியில் மது குடித்து விட்டு மறுநாள் திருமணத்திற்கு செல்லாமல் இருந்த வினோத நிகழ்வு பீகாரில் நடைபெற்றுள்ளது. இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தடல் புடலாக திருமண ஏற்பாடு
பீகார் மாநிலம் பகல்புர் மாவட்டம் சுல்தான்கஞ்ச் கிரமத்தில் கடந்த திங்கள் கிழமை திருமணம் ஒன்று நடைபெறுவதாக இருந்தது. திருமணத்திற்காக மணமகன் மற்றும் மணமகள் வீட்டில் தடல் புடல் ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டு இருந்தது. திருமணத்திற்கு முந்தைய நாளே உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் வரத் தொடங்கினர். திருமண வீடு களை கட்டியிருந்த நிலையில், திருமணத்திற்கு முந்தைய நாள் இரவு மாப்பிள்ளை மது போதையில் மிதந்ததாக சொல்லப்படுகிறது.

போதையில் தூங்கிய மாப்பிள்ளை
மறுநாள் தனக்கு திருமணம் என்பதை மறக்கும் அளவுக்கு மித மிஞ்சிய அளவுக்கு மாப்பிள்ளை குடித்துள்ளார். இதனால் மறுநாள் திருமணத்திற்கு செல்லாமல் மாப்பிள்ளை இருந்துள்ளார். திருமணம் நடைபெறும் இடத்தில் மணமகள் மற்றும் அவரது வீட்டினர் மாப்பிள்ளைக்காக காத்திருந்துள்ளனர். ஆனால், வெகு நேரம் ஆகியும் மாப்பிள்ளை திருமண மண்டபத்திற்கு வரவில்லை. இந்த நிலையில், போதை தெளிந்து சுயநினைவுக்கு மாப்பிள்ளை வந்த பிறகு அவசர அவசரமாக பெண் வீட்டினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

என்னால் எப்படி வாழ முடியும்?
ஆனால், திருமணத்தையே மறக்கும் அளவிற்கு மதுபோதையில் மிதக்கும் நபருடன் என்னால் வாழ முடியாது என்று முடிவு செய்த மணப்பெண்ணோ திருமணம் செய்ய மறுத்து விட்டார். தன்னையும் தனக்கு இருக்கும் கடமைகளைக் கூட மறக்கும் அளவிற்கு குடிக்கும் ஒரு நபருடன் எப்படி வாழ முடியும் என்று கருதிய மணப்பெண் இந்த முடிவுக்கு வந்ததாக மணப்பெண் வீட்டினர் தெரிவித்தனர். அதேபோல், திருமணத்திற்கான செலவுத் தொகையை தங்களுக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் பெண் வீட்டினர் மாப்பிள்ளையிடம் கேட்டுள்ளனர்.

சொந்த செலவிலேயே வேட்டு
திருமணத்திற்கான செலவு தொகையை திருப்பி கொடுத்தால் மட்டுமே மாப்பிள்ளை உறவினர்களை விடுவோம் என அவர்களை சிறை பிடித்து வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த போலீசார் இரு வீட்டினருடன் பேசி பிரச்சினையை தீர்த்து வைத்ததாக சொல்லப்படுகிறது. சொந்த திருமணத்தையே மறக்கும் அளவுக்கு மணமகன் மது அருந்தி விட்டு தனது மணவாழ்க்கைக்கு சொந்த காசிலேயே வேட்டு வைத்துவிட்டாரே என்று அப்பகுதி மக்கள் இந்த சம்பவம் குறித்து பரபரப்பாக பேசிக்கொண்டனர்.

மேடையிலேயே மட்டையான மாப்பிள்ளை
கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், அசாமில் திருமணத்தின் போது மணமேடையில் போதையில் தள்ளாடியபடி இருந்த மாப்பிள்ளை மணமேடையிலேயே படுத்து உறங்கினார். இதனால், கோபம் அடைந்த மணப்பெண் திருமணத்தை நிறுத்தி விட்டார். மணமகன் போதையில் சரிந்து விழும் காட்சிகளும் சமூக வலைத்தளங்களிலும் பரவியிருந்தது.












Click it and Unblock the Notifications