பீகாரில் தேர்தல் ஆணையர் ஆய்வு! சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் வெளியாகிறது!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இன்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு பீகாரில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் ஆய்வு மேற்கொள்கிறார். இதனையடுத்த விரைவில் தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு வெளியாக உள்ளது.
பீகார் சட்டப்பேரவை 243 உறுப்பினர்களைக் கொண்டது. இதன் பதவிக்காலம் நவம்பர் 22 அன்று முடிவடைகிறது. சத் திருவிழாவிற்குப் பிறகு தேர்தல் நடக்கும். பல கட்டங்களாகத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது. வழக்கமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட மாநிலத்தில் தேர்தல் ஆணையம் ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில், இன்றும் நாளையும் பீகாரில் ஞானேஷ்குமார் ஆய்வு மேற்கொள்கிறார்.

இந்த ஆய்வின்போது அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், காவல்துறையினர், மாவட்ட நிர்வாக உயர் அதிகாரிகள், செலவீன பார்வையாளர்கள், தேர்தல் அதிகாரிகள் ஆகியோருடன் ஆய்வை ஞானேஷ்குமார் கலந்தாலோசனை மேற்கொள்வார். பீகாரை பொறுத்தவரை கடந்த 2005ம் ஆண்டு முதல் நிதிஷ்குமார்தான் முதலமைச்சராக இருக்கிறார். இந்த முறையும் அவரே முதல்வர் வேட்பாளராக களமிறக்கப்பட்டிருக்கிறார். ஆனால் கடந்த தேர்தலில் அவருடைய ஐக்கிய ஜனதா தளம் கட்சி குறைவான வாக்குகளை பெற்றது அவருக்கான போட்டியை அதிகரித்திருக்கிறது.
அதேபோல, மறுபுறம் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் ஓரணியில் திரண்டு இருக்கின்றன. இது ஐக்கிய ஜனதா தளம்+பாஜக கூட்டணியை தோற்கடிக்குமா? என்று கேள்வி எழுந்திருக்கிறது. சமீபத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த நடவடிக்கை காரணமாக பீகாரில் மத்திய அரசு மீதும், ஆளும் நிதிஷ்குமார் மீதும் அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. இதனை சரி செய்ய பல்வேறு சிறப்பு திட்டங்களை மத்திய அரசு பீகாருக்கு அறிவித்திருக்கிறது. இதெல்லாம் தேர்தல் வெற்றிக்கு கை கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இன்று ஞானேஷ்குமார் ஆய்வு மேற்கொள்ளும் நிலையில், பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications