கிழிக்கப்பட்ட உள்ளாடை.. "அரை நிர்வாண கோலத்தில்".. அலறிய பழங்குடியின பெண்.. அத்துமீறிய வனத்துறை?
பாட்னா: பீகாரில் 30 வயது மதிக்கத்தக்க பழங்குடியின பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே மோதல் வெடித்திருக்கிறது.
பீகார் மாநிலத்தின் ரோஹ்தாஸ் மாவட்டத்தில், ரோஹ்தாஸ்கர் கோட்டைக்கு அருகே உள்ள வனப்பகுதியில் ஓரான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் பலர் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்கள் இந்த காட்டில் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு கிடைக்கும் விறகுகளும், தேனும்தான் இவர்களின் பொருளாதாரத்திற்கான ஒரே வழி. மற்றபடி அன்றாட தேவைகளை காட்டிலிருந்து கிடைக்கும் பழங்கள், கிழங்குகள் போன்றவற்றிடமிருந்து பூர்த்தி செய்து கொள்வார்கள்.
ஆனால் சில நாட்களாக இங்கு வனத்துறையினரின் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. அதாவது, இந்த பழங்குடியினரை காட்டில் விறகுகளை சேகரிக்க கூடாது என்றும், காடுகளை விட்டு வெளியேற வேண்டும் எனவும் கூறி சில கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்திருக்கின்றனர். ஆனால் இதை பழங்குடியின மக்கள் பொருட்படுத்தாமல் காட்டுக்குள் போகும்போது வனத்துறையினருக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது.

பெண் மாயம்
இதனால் வனத்துறையினர் காட்டுக்குள் இருக்கும்போது பெண்கள் காட்டிற்குள் நுழையாமல் தவிர்த்து வந்திருக்கின்றனர். இவ்வாறு இருக்கையில் கடந்த 4ம் தேதியன்று 10 பேர் கொண்ட பெண்கள் குழு ஒன்று காட்டில் விறகுகளை சேகரிக்க சென்றிருக்கிறது. அப்படி சென்றபோது எதிர்பாராத விதமாக வனத்துறையினர் எதிர் வந்திருக்கின்றனர். எனவே உடனடியாக அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றிருக்கிறார்கள். மாலையில் கலைந்து சென்ற அனைவரும் ஒன்று கூடியுள்ளனர். ஆனால் இதில் 30 வயது மதிக்கத்தக்க பெண் மட்டும் மிஸ்ஸிங். இதனால் பதற்றமடைந்த ஊர் மக்கள் அன்றிரவு முழுவதும் அப்பெண்ணை தேடி அலைந்துள்ளனர்.

காடு
ஆனால் அப்பெண் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஊர் தலைவர் இந்த விஷயத்தில் தலையிட்டு அடுத்த நாள் காலையில் பெண்ணை தேடியுள்ளனர். உள்ளூர் மக்கள் இந்த காட்டை கண்டு மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். ஏனெனில் இந்த காட்டை பொறுத்த அளவில் எழுதப்படாத ஒரு விதி இருக்கிறது என்றும், அதாவது இக்காட்டில் இரவில் யாரும் தனியாக மாட்டிக்கொள்ள கூடாது என்றும் அவ்வாறு மாட்டிக்கொண்டவர்கள் அடுத்த நாள் காலை வரை கிடைக்கவில்லையெனில் அவர்கள் நிச்சயம் உயிரிழந்திருப்பார்கள் எனவும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். அதேபோல காணாமல் போன பெண்ணும் அடுத்த நாள் காலை வரை கிடைக்கவில்லை.

சடலம்
பின்னர் அடுத்த நாள் தேடுதல் வேட்டையில் ஒரு பெரிய பள்ளத்தில் இப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது இப்பெண் ஏறத்தாழ நிர்வாணமாக இருந்திருக்கிறார். இவரின் மேல் இருந்த உடைகள் அனைத்தும் தாறுமாறாக கிழிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து அப்பெண்ணின் சடலத்தை அங்கிருந்து மீட்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை. பின்னர் மூன்றாவது நாள் நீண்ட முயற்சிக்கு பின்னர் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கிராமத்தின் தலைவர் ஷியாம் நாராயண், "இப்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதற்கான அனைத்து அடையாளங்களும் இவரது உடலில் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

பலாத்காரம்
இது கிராம மக்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக வனத்துறையினர் மீது திடீரென நேற்று தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் அதிகாரிகள் சிலரும், வனத்துறையினரின் வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதனை எதிர்த்து வனத்துறையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ரோஹ்தாஸ்கர் கோட்டை வனப்பகுதி முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. உயிரிழந்த பெண்ணின் உடற்கூறாய்வு அறிக்கை இன்னும் கிடைக்கப்படாத நிலையில் அப்பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டாரா? என்பது குறித்து இன்னும் தெரியவில்லை என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications