பீகாரில் தொகுதி உடன்பாடு ஓவர்.. பாஜகவுக்கு சவால் கொடுக்க பக்கா பிளான் உடன் இறங்கும் இந்தியா கூட்டணி!
பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி உடன்பாடு நிறைவடைந்துள்ளது. லோக்சபா தேர்தலில் மிக முக்கியமான மாநிலமாக கருதப்படும் பீகாரில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டிருப்பது இந்தியா கூட்டணிக்கு பாசிட்டிவாக பார்க்கப்படுகிறது.
கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த ஆண்டும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. லோக்சபா தேர்தலை பொறுத்த அளவில் உத்தரப் பிரதேசமும், பீகாரும் மிக முக்கியமான மாநிலங்களாகும். இரண்டு மாநிலங்களை சேர்த்தால் 120 தொகுதிகள் வருகிறது. ஆனால், தென்னிந்தியாவில் இதனை சீட்டுகளை பெற வேண்டும் எனில், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா தெலங்கானா என இத்தனை மாநிலங்களில் ஏறத்தாழ அனைத்து தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். எனவேதான், தேசிய கட்சிகள் உ.பி மற்றும் பீகார் மாநிலங்களில் முழு கவனம் செலுத்துகின்றன.

அந்த வகையில் பாஜக முழு வேகத்துடன் இரண்டு மாநிலங்களில் களமிறங்கியுள்ளது. ஆனால் பாஜகவை எதிர்த்து களமிறங்கியுள்ள இந்தியா கூட்டணி, நீண்ட நாட்களாக பீகாரில் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டை முடிக்காமல் இழுக்கடித்து வந்தது. இந்நிலையில் இன்று தொகுதி உடன்பாடு முடிவுக்கு வந்திருக்கிறது.
அதன்படி, மொத்தமுள்ள 40 தொகுதிகளில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி 26-ல் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும் இடதுசாரி கட்சிகள் 5 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. சிபிஐஎம்எல் -3, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது. இதனை ஆர்.ஜே.டி.காங்கிரஸ், இடதுசாரி கட்சி தலைவர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
மாநிலத்தின் அரசியல் தன்மையை பொறுத்த அளவில், பிரதான கட்சியாக ஐக்கிய ஜனதாதளம் இருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இக்கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதேபோல சட்டமன்ற எதிர்க்கட்சியாக இருந்த பாஜக பாஜக 17 தொகுதிகளில் வென்றது. இது தவிர லோக் ஜனசக்தி கட்சி 6 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வென்றது.
சட்டமன்ற தேர்தலை பொறுத்த அளவில் ஜக்கிய ஜனதாதளம், பாஜக கூட்டணி சார்பில் முதலமைச்சராக இருக்கும் நிதிஷ்குமார் இருந்து வருகிறார். ஆனால், இவருடைய அரசியல் செயல்பாடுகள் சமீப காலமாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ராஷ்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்தார். அதன் பின்னர் இந்தியா கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார்.
ஆனால், மீண்டு பாஜகவுடன் கைகோர்த்துக்கொண்டார். எனவே இவரது நிலைத்தன்மையற்ற அரசியல் செயல்பாடுகள் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. இதுவே பாஜகவுக்கு பலவீனத்தை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது. பீகாரில் இந்த முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications