குடியரசுத் தலைவர் போட்டியில் பீகார் முதல்வரா? எல்லாம் பொய்யாம் - நிதீஷ் குமாரே சொல்லிட்டாரு
பாட்னா: இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் நிதீஷ் குமார் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் மறுத்து இருக்கிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது.
இதனை தொடரும் வரும் ஜூலை 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் கடந்த 9 ஆம் தேதி அறிவித்தது.

பாஜக தீவிரம்
தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான முயற்சியில் பாஜக முழு மூச்சாக இறங்கி இருக்கிறது. கூட்டணி கட்சிகள், நட்பு கட்சிகளிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் பாஜக, மத்திய அரசு இனி வரும் காலங்களில் கொண்டு வரும் முக்கிய மசோதாக்களை ஒருமனதாக ஏற்கும் வகையில் தங்களுடன் ஒத்த கொள்கை கொண்டவரை குடியரசுத் தலைவராக நியமிக்க திட்டமிட்டு இருக்கிறது.

மம்தா அழைப்பு
பாஜக அளவுக்கு காங்கிரஸ் கட்சி இன்னும் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முழுமையாக தயாராகவில்லை. அமலாக்கத்துறை விசாரணை, உட்கட்சிப் பூசல் போன்றவற்றால் அக்கட்சி இதில் முழு கவனம் செலுத்தவில்லை என தெரிகிறது. அதே நேரம் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி திமுக உள்ளிட்ட மாநில கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார்.

நிதீஷ் குமார் பெயர்
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. பாஜகவுடன் கூட்டணி ஆட்சி நடத்தி வரும் நிதீஷ் குமாரின் நீண்ட அரசியல் அனுபவத்தையும் எதிர்க்கட்சிகளோடு இணக்கமாக நடந்துகொள்ளும் பக்குவத்தையும் வைத்து அவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் வேட்பாளராக நிறுத்த பாஜக திட்டமிட்டு இருந்ததாக தகவல் வெளியானது.

ஐக்கிய ஜனதா தளம் பிரமுகர் விருப்பம்
இதுகுறித்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் ஷ்ரவன் குமார் தெரிவிக்கையில், நிதீஷ் குமாருக்கு குடியரசுத் தலைவர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் உள்ளன. நிதீஷ் குமார் இந்திய குடியரசுத் தலைவராக வேண்டும் என ஒரு பீகாரியாக நான் விரும்புகிறேன். ஒவ்வொரு நபரும் நிதீஷ் குமார் இந்திய குடியரசுத் தலைவராக வேண்டும் என்று ஆசைப்படுவார்." என்றார்.
Recommended Video

நிதீஷ் குமார் மறுப்பு
இதனிடையே குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதாக வெளியான தகவலுக்கு நிதீஷ் குமார் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். "நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை. நான் எங்கும் செல்லப்போவது கிடையாது. இவை அனைத்தும் வெற்று யூகங்கள்தான். அவற்றுக்கு அடிப்படை ஆதாரம் கிடையாது. மீண்டும் சொல்கிறேன், "நான் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை." என்றார் அழுத்தம் திருத்தமாக.












Click it and Unblock the Notifications