அக்னிபாத்தால் பாஜக கூட்டணியில் புகைச்சல்.. ”இளைஞர்களின் மன வலியை உணரனும்” -ஜேடியு செய்தித்தொடர்பாளர்
பாட்னா: அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக பீகார் உட்பட நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில இதழுக்கு குறித்து பேட்டியளித்துள்ளார். செய்தியாளர் எழுப்பிய கேள்விகளையும் அதற்கு அவரளித்த பதில்களையும் காண்போம்.
செய்தியாளர்: அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறீர்களா?
கே.சி. தியாகி: உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரிகள், இளைஞர் பிரதிநிதிகள், அரசு பிரதிநிதிகள் ஒன்றாக கூடிப்பேசிய அக்னிபாத் திட்டத்தை மறுஆய்வு செய்ய வேண்டும். நாங்கள் அதை திரும்பப்பெற சொல்லவில்லை. ஆனால், இளைஞர்களின் உணர்வுகளை மதித்து திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
செய்தியாளர்: அக்னிபாத்தால் கிராமபுற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறையும் என்று நினைக்கிறீர்களா?
கே.சி. தியாகி: உத்தரப்பிரதேசம், இமாச்சல பிரதேசம், அரியானா, பீகாரில் பாதுகாப்புப் படை மீது இளைஞர்களிடம் அதிக ஈர்ப்பு உள்ளது. இந்த வேலை கிராமபுற பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது ராணுவ வீரர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கப்பட்டாலும், வீட்டு செலவுகளுக்கு ஒரு தொகையை அவர்கள் அனுப்புகிறார்கள். அந்த வகையில் பாதுகாப்பு படை வேலை என்பது வறுமை ஒழிப்பின் ஒரு அங்கமாக உள்ளது. அக்னிபாத் திட்டத்தால் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்கள் மனம் நிச்சயம் காயப்பட்டிருக்கும்.
செய்தியாளர்: மத்திய பாஜக அரசின் விரிவான வேலைவாய்ப்பு திட்ட மாதிரி எப்படி இருக்க வேண்டும்?
கே.சி. தியாகி: மத்திய அரசு நில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறது. ஆனால், நாம் காந்திய வழியில் குடிசை தொழிலில் கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் கிராமங்கள் தன்னிறைவு பெறும். நகரங்களுக்கு மக்கள் குடிபெயர்ந்து செல்ல மாட்டார்கள். கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் வேலை வாய்ப்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால் இளைஞர்கள் கோபத்தோடு உள்ளார்கள்.
செய்தியாளர்: அக்னிபாத் திட்டத்தால் இளைஞர்களின் ஆதரவை பாஜக அரசு இழக்குமா?
கே.சி. தியாகி: நான் அப்படி நினைக்கவில்லை. பிரதமர் நரேந்திர மோடி இதுகுறித்த நடவடிக்கைகளை எடுப்பார். அவர் நில கையகப்படுத்துதல் சட்டம் மற்றும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றார். தற்போதைய பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக அவர் இளைஞர்களின் பிரச்சனை குறித்து பேசுவார் என்று நம்புகிறேன்.
வாழ்த்து சொல்லாட்டிகூட பரவாயில்ல.. அதுக்காக இப்டியா மீம்ஸ் போட்டு கலாய்க்குறது.. அதுவும் இன்னைக்கு?
செய்தியாளர்: அக்னிபாத் திட்டத்தால் உங்கள் கூட்டணி கட்சியான பாஜகவுடன் மற்றொரு கருத்து வேறுபாட்டை கொண்டிருக்கிறீர்களா?
கே.சி. தியாகி: இதெல்லாம் கருத்து வேறுபாடு அல்ல. முக்கியமான கொள்கை சார்ந்த விவகாரங்களில் எங்களுடைய நிலைபாட்டை நாங்கள் தெரிவிக்கிறோம். வாஜ்பாய் ஆட்சிகாலத்திலும் பாஜகவின் கருத்திலிருந்து வேறுபட்டிருக்கிறோம். பொதுசிவில் சட்டம், என்.ஆர்.சி விவகாரத்திலும் பாஜகவுடன் நாங்கள் உடன்படவில்லை.