பாலியல் தொல்லை குற்றத்துக்கு துணி துவைக்கும் தண்டனையா? நீதிபதிக்கு உயர் நீதிமன்றம் விதித்த தடை!
பாட்னா: பீகாரில் பாலியல் தொல்லை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு துணி துவைக்கும் தண்டனை கொடுத்த நீதிபதிக்கு பாட்னா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
பீகார் மாநிலம், மதுபானி மாவட்டத்தைச் சேர்ந்த சலவைத் தொழிலாளி லாலன் குமார் சபி. அந்த பகுதியில் இவர் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் வைக்கப்பட்டது.
துணி துவைக்கும் நேரத்தில் பெண் ஒருவரிடம் பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக இவர் மீது புகார் வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார்.

போலீஸ் வழக்கு
இது தொடர்பாக போலீசாரும் வழக்கு பதிவு செய்தனர். லாலன் குமாருக்கு எதிரான வழக்கு ஜஞ்சார்பூர் துணை மண்டலத்தின் மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த ஜஞ்சார்பூர் துணை மண்டலத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதி அவினாஷ் குமார், இதில் வினோதமான உத்தரவு ஒன்றை வழங்கினார்.

என்ன உத்தரவு
அதன்படி, லாலன் தான் வசிக்கும் கிராமத்தில் உள்ள பெண்களின் சேலைகளை ஆறு மாதத்துக்கு இலவசமாக துவைத்து, அயர்ன் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பெயில் வழங்க இதுதான் நிபந்தனை என்று அவர் உத்தரவால் குறிப்பிட்டார். அதோடு பெயில் வழங்க பிணை தொகை கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இவர் துணி துவைக்கும் தொழிலை சேர்ந்தவர் என்பதால் அது தொடர்பான தண்டனையே இவருக்கு கொடுக்கப்பட்டது.

துணி துவைக்கும் தொழில்
இவரின் வித்தியாசமான இந்த தீர்ப்பை சிலர் வரவேற்றனர். அதே சமயம் இதற்கு எதிராக கடும் விமர்சனங்களும் எழுந்தன. பாலியல் குற்றங்களுக்கு இதுதான் தண்டனையா? ஏற்கனவே இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அப்படி இருக்கும் போது இது போன்ற சாதாரண தண்டனைகளை கொடுப்பது குற்றங்களை அதிகரிக்க செய்யும். எப்படி ஒரு நீதிபதி இப்படி தண்டனை கொடுக்கலாம் என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.

தடை
இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு எதிராக பாட்னா உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது. அதில், மறு உத்தரவு வரும் வரை நீதிபதி அவினாஷ் குமார் நீதிமன்ற பணிகளை மேற்கொள்ள தடை விதிக்கப்படுகிறது, என்று கூறியுள்ளது. அவினாஷ் குமார் பிறப்பித்த உத்தரவை பாட்னா உயர் நீதிமன்றம் விமர்சனம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மறு உத்தரவு வரும் வரை இவர் பணிகளை மேற்கொள்ள முடியாது.

ஏற்கனவே இப்படி?
ஏற்கனவே இதேபோன்ற உத்தரவுகளை அவினாஷ் குமார் வழங்கி இருக்கிறார். மாநில தடை சட்டம் மூலம் கைது செய்யப்பட்ட நபர் ஒருவருக்கு பெயில் வழங்க, குற்றஞ்சாட்டப்பட்ட நபர் ஏழை குழந்தைகளின் கல்விக்கு செலவு செய்ய வேண்டும். ஏழை குழந்தைகளுக்கு பள்ளி பீஸ் கட்டி அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications