கைக்கொடுத்த மூடநம்பிக்கை? கடித்த பாம்பையே திருப்பி கடித்து உயிர் தப்பிய நபர்.. எப்படி சாத்தியமானது?
பாட்னா: பீகாரில் பாட்டி சொன்ன கதை மற்றும் மூடநம்பிக்கையால் கடித்த பாம்பையே திரும்ப 2 முறை கடித்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். மாறாக அந்த பாம்பு செத்துவிட்டது. இந்நிலையில் தான் பாம்பு கடித்தால் அதனை திரும்ப நாம் கடித்தால் பிழைப்போம் என்பது உண்மையா? இந்த நபர் எப்படி உயிர் தப்பினார்? வாங்க பார்க்கலாம்.
பொதுவாக பாம்பு கடித்தால் மனிதர்கள் உயிரிழப்பதும், பாம்பு கடித்த பிறகு உடனடியாக சிகிச்சை பெற்று உயிர் பிழைப்பதையும் நாம் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்போம். ஆனால் வழக்கத்துக்கு மாறாக பீகாரில் தற்போது ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது ரயில்வே பணியாளரை பாம்பு கடித்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ரயில்வே பணியாளர் பாட்டி சொன்ன மூடநம்பிக்கை கதையை நினைவுப்படுத்தி உடனடியாக அந்த பாம்பை 2 முறை கடித்த நிலையில் தற்போது அவர் உயிர் பிழைத்தார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், இது முற்றிலும் உண்மை.
மேலும் பீகாரில் என்ன நடந்தது? எப்படி அந்த ரயில்வே பணியாளர் பாம்பு கடித்த பிறகும், பாம்பை 2 முறை கடித்தும் உயிர் பிழைத்தார்? என்பது பற்றி இங்கு பார்ப்போம். அதாவது ஜார்கண்ட்டை சேர்ந்தவர் சந்தோஷ் லோகர் (வயது 35). இவர் பீகார் மாநிலத்தில் ரயில்வே தண்டவாளம் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி என்பது ராஜாலி எனும் வனப்பகுதியில் நடந்து வருகிறது. இதனால் அங்கு கூடாரம் அமைத்து அவர்கள் தண்டவாள பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் தான் கடந்த 2ம் தேதி சந்தோஷ் லோகர் வழக்கம்போல் பணிக்கு சென்றார். அன்றைய தினம் அவருக்கு பணி அதிகமாக இருந்துள்ளது. இதனால் அவர் பணி முடிந்து கூடாரத்துக்கு வந்தவுடன் அசதியில் படுத்து தூங்க தயாரானார். கூடாரத்தில் அவர் படுத்து கிடந்தபோது திடீரென்று அங்கிருந்த பாம்பு அவரை கடித்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சந்தோஷ் லோகர் உடனடியாக அந்த பாம்பை கையில் பிடித்து 2 முறை அடுத்தடுத்து கடித்துள்ளார். இதில் அந்த பாம்பு நெளிந்துள்ளது. சந்தோஷின் பிடியில் இருந்து பாம்பால் விடுபடமுடியவில்லை. அதோடு அந்த பாம்பு செத்துப்போனது இதற்கிடையே சத்தம் கேட்டு அங்கு ஓடிவந்த மற்றவர்கள் சந்தோஷ் லோகரை பார்த்தனர். அவர் கையில் பாம்புடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
மேலும் சந்தோஷ் தன்னை பாம்பு கடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை மற்றவர்கள் மீட்டு ராஜாலி சப்டிவிஷன் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். டாக்டர் சதீஷ் சந்திரா சின்ஹா தலைமையிலான குழு சந்தோசுக்கு சிகிச்சை அளித்தது. இந்த சிகிச்சையை தொடர்ந்து உயிர் பிழைத்தார். மேலும் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
முன்னதாக சந்தோஷிடம் டாக்டர்கள் விசாரித்தனர். பாம்பை ஏன் திரும்ப கடித்தீர்கள்? என்று கேட்டனர். அதற்கு அவர், ‛‛எங்கள் கிராமத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. அதாவது பாம்பு கடித்தால் உடனடியாக அந்த பாம்பை பிடித்து 2 முறை கடிக்க வேண்டும். அப்படி கடிக்கும்போது நமது உடலில் ஏறிய விஷம் மீண்டும் பாம்பின் உடலுக்கே சென்றுவிடும். இதனால் பாம்பு கடியால் நாம் உயிரிழக்க மாட்டோம் என்று பாட்டி முதல் அனைவரும் கூறியுள்ளனர்'' என்றார்.
இதனை கேட்டு ஒருபக்கம் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை பணியாளர்கள், இன்னொரு புறம் சிரித்தனர். அதன்பிறகு சந்தோசுக்கு அறிவுரை கூறினர். பாம்பு கடித்தால் அதனை திரும்ப கடித்தால் விஷம் ஒன்றும் அதன் உடலுக்கு செல்லாது. நமக்கு தான் பாதிப்பு அதிகமாகலாம். நீங்கள் சொல்வது மூடநம்பிக்கை கதை. இனி இதனை நம்பாதீர்கள். நீங்கள் இப்போது பிழைத்ததற்கு காரணம் உரிய நேரத்தில் உங்களுக்கு மருத்துவ சிகிச்சை கிடைத்தது தான் என அட்வைஸ் கூறி அனுப்பினர்.
இதனால் பாம்பு கடித்தால் மீண்டும் அதனை திரும்ப கடித்தால் உயிர் பிழைப்போம் என்பது வெறும் மூடநம்பிக்கை தான். அதனை யாரும் நம்ப வேண்டாம். யாரையாவது பாம்பு கடித்தால் உடனடியாக டாக்டரை அணுகி உரிய சிகிச்சை பெற்று கொள்வது தான் உயிர் பிழைப்பதற்கு சிறந்த வழியாகும்.












Click it and Unblock the Notifications