முன்கூட்டியே தேர்தலா? ஓகே தான்.. ‛இந்தியா’ கூட்டணியின் பிரசார தேதியை கூறிய நிதிஷ் குமார்! செம ஸ்பீட்
பாட்னா: நாடாளுமன்றத்துக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில் எதிர்க்கட்சிகளின் ‛இந்தியா' கூட்டணியின் தேர்தல் பிரசாரம் தொடங்கும் தேதியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார். பிரசாரம் துவங்கும் தேதி என்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. 2024ம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்புள்ளது. இது ஒருபுறம் இருக்க மத்திய அரசு நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்து நோக்கத்தில் 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ‛இந்தியா' என்ற பெயரில் கூட்டணியை அமைத்துள்ளன. இந்த கூட்டணி தீவிரமாக செயல்பட்டு வரும் நிலையில் முன்கூட்டியே தேர்தல் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
இதற்கிடையே தான் ‛இந்தியா' கூட்டணியின் 3வது ஆலோசனை கூட்டம் நேற்றும், நேற்று முன்னதினமும் மும்பையில் நடந்து முடிந்தது. மொத்தம் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், விசிக தலைவர் திருமாவளவன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் சிவசேனா (உத்தவ்) அணியின் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமை வகித்தனர். கூட்டத்தில் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க திட்டமிடப்பட்டது. மேலும் ‛இந்தியா' கூட்டணி சார்பில் ஒருங்கிணைப்பு குழு, பிரசார குழு, சமூக வலைதள குழு உருவாக்கப்பட்டது. மேலும் முன்கூட்டிய நாடாளுமன்ற தேர்தல் நடந்தால் அதனை எதிர்கொள்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில் தான் ‛இந்தியா' கூட்டணியின் பிரசாரம் தொடங்கும் தேதியை பீகார் முதல்வரும், ‛இந்தியா' கூட்டணி அமைய முக்கிய பங்கு வகித்தவருமான நிதிஷ் குமார் கூறியுள்ளார். இதுபற்றி பீகார் தலைநகர் பாட்னாவில் நிதிஷ் குமார் கூறியதாவது: நாடாளுமன்றத் தேர்தலை பாஜக விரைவாக நடத்தக்கூடும் என்ற சந்தேகம் உள்ளது. இதனால் நாங்கள் விரைவாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறோம். எங்களை பார்த்து தற்போது பாஜக அச்சமடைந்துள்ளது. எங்கள் கூட்டணியில் தொகுதிப் பங்கீடு ஒரு பிரச்சினையாக இருக்காது.
ஏனென்றால் இதுகுறித்த கலந்துரையாடல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் சுமூகமான முடிவு எடுக்கப்படும். மேலும் ‛இந்தியா' கூட்டணியின் தேர்தல் பிரசாரம் என்பது விரைவில் தொடங்கும். மகாத்மா காந்தி பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி நாடு முழுவதும் பிரசாரத்தை மேற்கொள்ள இருக்கிறோம்'' என்றார்.
பீகார் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவருமான தேஜஸ்வி யாதவ், "பாஜக கூட்டணிக்கு வலிமையான மாற்று தேவை என மக்கள் விரும்புகின்றனர். இதனால் நாங்கள் இணைந்துள்ளோம். கூட்டணிக்கு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வுக்கு மத்திய அரசு குழு அமைத்துள்ளது.
ஒரே நாடு ஒரே வருமான கொள்கையை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும். அனைவருக்கும் பொருளாதார அளவிலான நீதி கிடைக்க செய்ய வேண்டும். பாஜக ஒட்டுமொத்த நாட்டையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்க விரும்புகிறது. இதனால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே தலைவர், ஒரே நாடு ஒரே கட்சி , ஒரே நாடு ஒரே மதம் என்று பேசி வருகின்றனர். இது எல்லாம் பயனற்ற பேச்சுகள்'' என்றார்.












Click it and Unblock the Notifications