"கர்ப்பம்".. ஆம்பளைங்க கண்டுக்குறதே இல்ல.. படிப்பறிவற்ற பெண்கள்.. நிதிஷ்குமார் சொன்னதுமே, சீறிய பாஜக
பெண்கள் படிப்பறிவு பெற்றால் மக்கள்தொகையை குறைக்க முடியும் என நிதிஷ்குமார் கூறியுள்ளார்
பாட்னா: "பெண்கள் படிப்பறிவு பெற்றால்தான் மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியும். அதுவரை மக்கள் தொகை பெருக்கத்தை குறைக்க முடியாது. இந்த விஷயத்தில் ஆண்கள் தங்களின் செயலின் தாக்கத்தை உணரத் தயாராக இல்லை. எனவே பெண்கள் முறையான கல்வி பெற்றால் தவிர மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியாது" என்று நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் சில மாதங்களுக்கு முன்பு, தான் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, பெண்கள் நலம் குறித்த கருத்துக்களை கூறியிருந்தார்.. மேலும் நாட்டில் நிலவி வரும் வரதட்சனை முறைக்கு எதிராக கடும் விமர்சனங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.
"எங்கள் காலத்தில் எல்லாம் மகளிருக்கு என்று தனியாக கல்லூரிகள் இருக்காது. அதை நான் மிகவும் மோசமாக உணர்ந்தேன். ஆனால் இன்றோ, பெண்கள் மருத்துவம், பொறியியல் என அனைத்து வகையான துறைகளிலும் இருக்கின்றனர்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோருக்கு நிதி உதவி வழங்க முடியாது-பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிரடி
ஆணும் ஆணும் திருமணம்
பெண்களுடைய மேம்பாட்டுக்காக நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு இருக்கிறோம். நாங்கள் வரதட்சணைக்கு தடை விதித்தோம். வரதட்சனை திருமண முறைக்கு எதிராகவும் குழந்தை திருமணத்துக்கு எதிராகவும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டோம். ஒரு பெண்ணை திருமணம் செய்துகொள்வதற்காக அவரிடம் வரதட்சனை பெறுவதை விட மோசமானது வேறு எதுவும் இல்லை. திருமணம் செய்தால் மட்டுமே குழந்தைகள் பிறக்கும். ஒரு ஆண் இன்னொரு ஆணை திருமணம் செய்துகொண்டால் எப்படி குழந்தை பிறக்கும்? என்று காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
அதிருப்திகள்
வரதட்சணை குறித்த நிதீஷ் குமாரின் கருத்துக்கு மகளிர் அமைப்புகள் மத்தியில் வரவேற்பு கிடைத்தாலும், ஆண்களுக்கு இடையே நடைபெறும் திருமணங்களை விமர்சிக்கும் வகையில் அவர் எழுப்பிய கேள்வி LGBTQ ஆதரவாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மத்தியில் அதிருப்தியை அப்போது ஏற்படுத்தியிருந்தது.. இந்நிலையில், மீண்டும் ஒரு கருத்தை சொல்லி, அதிருப்திகளை சம்பாதித்து வருகிறார் நிதிஷ்குமார்.. பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கும் நிலையில், ஆண்கள் பொறுப்பை ஏற்காமல் இருப்பதால் மக்கள் தொகை கட்டுக்குள் வராமல் உள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
கர்ப்பம்
வைஷாலியில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு நிதிஷ்குமார் பேசும்போது, "பெண்கள் கல்வியறிவு பெற்றால்தான், மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கட்டுப்படுத்தப்படும். இது இன்னும் குறையவில்லை, அதே விகிதத்தில் உள்ளது.. பெண்கள் சிறப்பான முறையில் கல்வியறிவு பெற்றிருந்தால் அல்லது அவர்களுக்கு விழிப்புணர்வு இருந்திருந்தால், கர்ப்பம் தரிப்பதில் இருந்து தங்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதை அவர்கள் அறிந்திருப்பார்கள். பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்கும்போது தான் மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
மக்கள் தொகை
ஆண்கள் தங்கள் செயலின் விளைவைப் பற்றி சிந்திக்கத் தயாராக இல்லை. மேலும், பெண்கள் சரியாகப் படிக்காததால் அவர்களால் அதிகாரத்தை செலுத்த முடியவில்லை. பெண்களுக்கு கல்வியறிவு கிடைக்க செய்ய வேண்டும். அல்லது கர்ப்பம் அடைவதை எப்படி தடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். தங்களது செயலினால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆண்கள் அக்கறை காட்டுவதில்லை. இதனால், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த முடியவில்லை" என்று கூறியுள்ளார். நிதிஷ்குமாரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இமேஜ்
15 வருடங்களாக ஆட்சி செய்துவிட்டு, இப்போது திடீரென பெண்கள் படிப்பறிவு இல்லாமல் இருக்கின்றனர் என்று நிதிஷ் விமர்சித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.. பாஜக இந்த விஷயத்திற்கும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், இந்த கருத்து மாநிலத்தின் இமேஜுக்கே களங்கம் விளைவிக்கும் விதமாக இருப்பதாகவும் விமர்சித்துள்ளது.. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் சாம்ராட் சௌத்ரி, "நிதீஷ்குமார் பயன்படுத்திய அநாகரீகமான வார்த்தைகள் அறியாமையின் உச்சமாகும்.. இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்தி, முதல்வர் பதவிக்கே அவர் களங்கம் ஏற்படுத்துகிறார்" என்று தன்னுடைய எதிர்ப்பை பதிவிட்டுள்ளார்.