பீகாரில் ஜன.28-ல் பாஜக ஆதரவுடன் நிதிஷ்குமார் புதிய ஆட்சி? 4 ஆண்டுகளில் 3-வது முறை முதல்வராகிறார்?
பாட்னா: பீகார் மாநிலத்தில் 3-வது முறையாக கூட்டணி விட்டு கூட்டணி தாவி வரும் ஞாயிற்றுக்கிழமையன்று புதிய ஆட்சியை முதல்வர் நிதிஷ்குமார் அமைக்க இருப்பதாகவும் பாஜகவின் சுஷில்குமார் மோடி துணை முதல்வராகிறார் எனவும் அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பீகாரில் தற்போது ஆர்ஜேடி- நிதிஷ்குமாரின் ஜேடியூ-காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து கூட்டணியை நடத்தி வருகின்றன. முதல்வராக நிதிஷ்குமார் இருந்து வருகிறார். லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் நிதிஷ்குமார் திடீரென மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தாவ திட்டமிட்டுள்ளாராம்.

நாளை மறுநாள் புதிய ஆட்சி?: இதனைத் தொடர்ந்து பீகார் பாஜக தலைவர்கள் டெல்லிக்கு நேற்று வரவழைக்கப்பட்டு ஆலோசனைகள் நடத்தப்பட்டன. நிதிஷ்குமார் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்புவதால் லோக்சபா தேர்தலில் பீகாரில் அதிக இடங்களைக் கைப்பற்ற முடியும்; ஆகையால் நிதிஷ்குமார் மீது எந்த விமர்சனத்தையும் முன்வைக்கக் கூடாது என பீகார் தலைவர்களுக்கு அதிரடி உத்தரவு போட்டு வழியனுப்பி வைத்ததாம் டெல்லி மேலிடம். இதனைத் தொடர்ந்து ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுக்கு குட்பை சொல்லிவிட்டு பாஜகவுடன் இணைந்து வரும் 28-ந் தேதி புதிய கூட்டணி ஆட்சியை அமைக்க இருக்கிறாராம் நிதிஷ்குமார். அன்றைய தினம் ஏற்கனவே ஒப்புக் கொண்ட அத்தனை நிகழ்ச்சிகளையும் நிதிஷ்குமார் ரத்து செய்துவிட்டாராம்.
4 ஆண்டுகளில் 3-வது முறை முதல்வராகும் நிதிஷ்?: பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020-ம் ஆண்டு நடைபெற்று முடிந்த போது பாஜக ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைத்து முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். 2022-ம் ஆண்டு பாஜகவை தூக்கி எறிந்துவிட்டு லாலுவின் ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகளுடன் புதிய ஆட்சி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றார் நிதிஷ்குமார். தற்போது ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் கூட்டணியையும் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்து 4 ஆண்டுகளில் 3-வது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறாராம் நிதிஷ்குமார். மேலும் பாஜகவி சுஷில்குமார் மோடி துணை முதல்வராகவும் பதவியேற்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லாலுவின் சித்து விளையாட்டு?: அதேநேரத்தில் நிதிஷ்குமாரின் இந்த கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க லாலு பிரசாத் யாதவ் தரப்பும் நிதிஷ்குமாரின் ஜேடியூவை உடைக்கும் வேலைகளில் ஜரூராக இறங்கி உள்ளதாம். ஜேடியூவை உடைத்துவிட்டால் லாலுவின் மகனும் தற்போதைய துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், பீகார் முதல்வராக வாய்ப்புகள் அதிகம் எனவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications