125 யூனிட் வரை மின்சாரம் இலவசம்! பீகாரில் ஆஃபரை அள்ளி கொடுக்கும் நிதிஷ் குமார்!
பாட்னா: பீகார் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில், வீடுகளுக்கு 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பால் 1.67 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இந்த உத்தரவு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் நிதிஷ் குமார் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், "நாங்கள் ஆரம்பம் முதலே அனைவருக்கும் மலிவு விலையில் மின்சாரம் வழங்கி வருகிறோம். இப்போது, ஆகஸ்ட் 1 முதல், அதாவது ஜூலை மாதத்திற்கான மின்சார கட்டணத்திலிருந்து, அனைத்து வீட்டு உபயோகிப்பாளர்களும் 125 யூனிட் வரை மின்சாரத்திற்கு கட்டணம் எதுவும் செலுத்தத் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளோம்.
அடுத்த மூன்று ஆண்டுகளில், வீடுகளின் கூரைகள் அல்லது அருகிலுள்ள பொது இடங்களில் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும். ஏழை குடும்பங்களுக்கு, சூரிய மின் அமைப்பை நிறுவுவதற்கான முழு செலவையும் 'குடீர் ஜோதி யோஜனா' திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கமே ஏற்கும். நடுத்தர வருமானம் கொண்ட குடும்பங்களுக்கும் அரசு மானியத்தை கொடுக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மாநிலம் 10,000 மெகாவாட் வரை சூரிய சக்தியை உற்பத்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு அறிவிப்பாக தொடர்ந்து வெளியாகி வருகிறது. கடந்த வாரம், அரசு வேலைகளில் பெண்களுக்கு 35% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று நிதிஷ் குமார் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு காரணம் இருக்கிறது. அதாவது ஆசிரியர் வேலைவாய்ப்பு குறித்து நிதிஷ் குமார் வெளியிட்டிருந்த அறிவிப்பு கடும் விமர்சனங்களை உருவாக்கியிருந்தது. அதாவது பீகாரில் ஆசிரியராக எந்த மாநிலத்தை சேர்ந்தவரும் ஆக முடியும் என்று உத்தரவிட்டிருந்தார். பீகார் மாநிலத்தில் வேலையற்ற இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையில், வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஆசிரியராக முடியும் என்று உத்தரவிட்டிருந்தது புகைச்சலை கிளப்பியிருந்தது.
இதனை சமாதானப்படுத்தவே, அரசு வேலை வாய்ப்புகளில் 35% பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, இளைஞர்களுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும், முன்னாள் முதல்வர் கற்பூரி தாக்கூர் பெயரில் திறன் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்றும் நிதிஷ் வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இவை அனைத்தும் அடுத்த 5 ஆண்டுகளில் செய்யப்படும் என்றும் கூறியுள்ளார்.
தற்போது நிதிஷ் குமார் 9வது முறையாக முதல்வராக பணியாற்றி வருகிறார். எதிர்வரும் தேர்தலில் ஜெயித்தால் 10வது முறையாக முதல்வராவார். அவரது ஐக்கிய ஜனதா தளம் தற்போது பாஜகவின் என்டிஏ கூட்டணியில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications