ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம்... பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகுமா? நிதிஷ் சொன்ன அந்த பதில்!
பாட்னா: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம் மத்திய பாஜக அரசுக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் குடைச்சலாக உருவெடுத்து வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்தித்தான் ஆக வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திட்டவட்டமாக வலியுறுத்தி உள்ளார்.
ஜாதிகளின் அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களின் கோரிக்கை. அண்மையில் பீகார் மாநிலம் இந்த கோரிக்கையை முன்னெடுத்தது.
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் அம்மாநில அனைத்து கட்சிக் குழு டெல்லி சென்றது. இக்குழுவில் சமாஜ்வாதி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இடம்பெற்றிருந்தன.

மோடியிடம் வலியுறுத்தல்
பிரதமர் மோடியை ஆகஸ்ட் 23-ந் தேதி சந்தித்த பீகார் அனைத்துக் கட்சிக் குழு, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதன் மூலம் இடஒதுக்கீடு உள்ளிட்டவைகளில் உள்ள ஏற்றத்தாழ்வுகள் சமன் செய்யப்படும் என்பதும் பொதுவான கருத்து. தமிழகம் இந்த கோரிக்கையை நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகிறது.

அமித்ஷாவுடன் ஜார்க்கண்ட் குழு சந்திப்பு
பீகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான அனைத்து கட்சிக் குழுவும் டெல்லி சென்றது. இக்குழுவில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 11 கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். டெல்லியில் நேற்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜார்க்கண்ட் அனைத்துக் கட்சி குழுத் தலைவர்கள் சந்தித்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு நிலை
இதனிடையே 2011-ல் சமூக, பொருளாதாரம் மற்றும் ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றை மத்திய அரசு நடத்தி இருந்தது. இதன் விவரங்களை வெளியிட உத்தரவிடக் கோரி மகாராஷ்டிரா அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடந்தது. இந்த வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, 2011-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு துல்லியமாக இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் ஆயிரக்கணக்கான உட்பிரிவினர் உள்ளனர். இவற்றையெல்லாம் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்ப்பது என்பது சாத்தியம் அல்ல என கூறியது. அதாவது ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவது சரியாக இருக்காது; சாத்தியப்படாது என்கிற வகையில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

நிதிஷ்குமார் வலியுறுத்தல்
மத்திய அரசின் இந்த கருத்து பெரும் சர்ச்சையையும் விவாதத்தையும் உருவாக்கி உள்ளது. இந்நிலையில் பாட்னாவில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாது என்கிற மத்திய அரசின் நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்துதான் ஆக வேண்டும். தற்போதைய நிலையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு கண்டிப்பாக நடத்தப்பட வேண்டும் என்றார். மேலும், உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் தவறானது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்போதுதான் நாட்டின் உண்மையான நிலைமை என்ன என்பது தெரியவரும். அதனடிப்படையில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ளவும் முடியும். சமூக, பொருளாதார நிலையுடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது சரியாக இருக்காது என்றார்.

பாஜக கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகலா?
அப்போது, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த மறுத்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஜேடியூ விலகுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிதிஷ்குமார், தற்போதைய நிலையில் அப்படியான ஒன்று விவாதிக்கப்படவும் இல்லை. பாஜகவுடன் இணைந்தே நாங்கள் செயல்படுவோம். ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஜேடியூவின் கோரிக்கை அல்லது பீகாரின் கோரிக்கை மட்டும் அல்ல. நாட்டின் பல மாநிலங்களும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications