பயங்கரவாதிகளுக்கு கற்பனைக்கும் எட்டாத தண்டனை கொடுப்போம்.. பீகார் பிரச்சாரத்தில் மோடி ஆவேச உரை
பாட்னா: காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் மூலம் இந்தியாவின் ஆன்மா மீது எதிரிகள் தாக்கி உள்ளனர். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவது ஒழிக்கப்படும். ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். பயங்கரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை வழங்கப்படும் என்று முதல் முறையாக பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜக மற்றும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சி கூட்டணி ஆட்சி நடக்கிறது. வரும் தேர்தலில் இந்த கூட்டணி அப்படியே களமிறங்க உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் ரூ.13,840 கோடி மதிப்பிலான திட்ட பணிகளை இன்று பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

பீகார் மாநிலம் மதுபானி நகரில் நடந்த விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று நலத்திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். அதன்பிறகு அவர் பொதுக்கூட்டத்தில் பேச தொடங்கினார். அப்போது காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் பலியான 26 பேருக்கு ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தும்படி கூறினார். பிரதமர் மோடி கைகளை கும்பிட்டபடி மவுன அஞ்சலி செலுத்தினார். அதேபோல் மேடையில் இருந்தவர்கள், பாஜகவினர் மவுன அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர் பயங்கரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை வழங்கப்படும் என்று ஆக்ரோஷமாக கூறினார். இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறியதாவது: இன்று பீகார் மண்ணிலிருந்து நான் முழு உலகத்துக்கும் ஒன்றை கூறுகிறேன். இந்தியா ஒவ்வொரு பயங்கரவாதியையும், அவர்களின் பின்னால் இருந்து கொண்டு இயக்கும் நபர்களையும் அடையாளம் கண்டு கண்காணித்து தண்டனை வழங்கும். பூமியின் கடைசி நாள் வரை பயங்கரவாதிகளை விடாமல் பின்தொடர்ந்து தண்டிப்போம்.
இந்தியாவின் ஆன்மா மீது எதிரிகள் தாக்கி உள்ளனர். பல்வேறு மாநிலங்கள் தங்களின் மகன்களை இழந்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவது ஒழிக்கப்படும். ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம். பயங்கரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை வழங்கப்படும்'' என்று கொதித்தார்.
மேலும் பிரதமர் மோடி பேசுகையில், ‛‛பயங்கரவாதத்தால் ஒருபோதும் இந்திய மக்களிடம் உள்ள ஒருங்கிணைந்த உணர்வு என்பது சிதைக்கப்படாது. பயங்கரவாதத்தை தண்டிக்காமல் விடமாட்டோம். நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். முழு நாடும் இதில் உறுதியாக உள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் உள்ளனர். நம்முடன் நின்ற மக்களுக்கும், தலைவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்’’ என்றார்.












Click it and Unblock the Notifications