பீகார்: பிசி, எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை 65% ஆக அதிகரித்த சட்டம் ரத்து-பாட்னா உயர்நீதிமன்றம் உத்தரவு
பாட்னா: பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 65% இடஒதுக்கீடு வழங்க வகை செய்த சட்டம் செல்லாது என பாட்னா உயர்நீதிமன்றம் அதிர்ச்சி தீர்ப்பளித்துள்ளது. பீகாரில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர் 65% இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது பாட்னா உயர்நீதிமன்றம் அதை ரத்து செய்திருக்கிறது.
நமது நாடு விடுதலை அடைவதற்கு முன்னர் 1931-ம் ஆண்டுதான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பே நடத்தப்பட்டது. அன்றைய புள்ளி விவரங்களின் அடிப்படையில் இன்றும் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதனால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் என்பது தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நீண்டகால கோரிக்கை. இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களைப் பகிரங்கப்படுத்தியது.
அத்துடன் நிற்காமல் பீகார் மாநிலத்தில் நடைமுறையில் இருந்த பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 50% இடஒதுக்கீட்டை 65% ஆகவும் உயர்த்தி சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதாவது பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் 30% (ஈபிசி - 18%; ஓபிசி - 12 %), தாழ்த்தப்பட்டோர் 16%; பழங்குடிகள் 1%; பிற்படுத்தப்பட்ட பெண்கள் 3% என மொத்தம் 50% இடஒதுக்கீடு நடைமுறையில் இருந்தது. இதனை பிற்படுத்தப்பட்டோர் 43%; தாழ்த்தப்பட்டோர் 20%; பழங்குடிகள் 2% என மொத்தம் 65% ஆக அதிகரித்து சட்டம் கொண்டுவரப்பட்டது. பீகார் மாநில சட்டசபையில் கடந்த ஆண்டு இதற்கான சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்த 65% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த பாட்னா உயர்நீதிமன்றமாது, அரசியல் சாசனம் வழங்கிய சம உரிமையை இந்த சட்டம் வழங்கவில்லை; ஆகையால் 65% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் செல்லாது என அதிர்ச்சித் தீர்ப்பளித்துள்ளனர். இத்தீர்ப்புக்கு எதிராக பீகார் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மேல்முறையீடு செய்யுமா? என்பது எதிர்பார்ப்பு.












Click it and Unblock the Notifications