பீகார் தேர்தலில் விஸ்வரூபம் காட்டிய பாஜக! 1991-ல் அத்வானியை போல சாதித்த பிரதமர் மோடி!!
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது களத்தில் சாதித்தவர்கள் பிரதமர் மோடியும் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவும்தான்.
வட இந்திய மாநிலங்களில் பீகாரில்தான் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவாகாமல் இருந்தது. சட்டசபை தேர்தலில் எண்ணிக்கையில் வேண்டுமானால் ஒரு தொகுதி குறைந்திருந்தாலும் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது பாஜக.
பீகார் தேர்தல் களத்தில் கொரோனா பரவலைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிரதமர் மோடி மேற்கொண்ட சூறாவளி பிரசாரம்தான் இதற்கு அச்சாரம் என்பது மிகை இல்லை. இத்தனைக்கும் பீகாரில் என்ன செய்வது? எதை எப்படி எதிர்கொள்வது? என தெரியாமல் விழிபிதுங்கிய நிதிஷ்குமாரையும் முதுகில் சுமந்தவாறுதான் பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

அத்வானியை போல..
1991-ல் வெற்றி தோல்வியோ வருவது வரட்டும்.. என பாஜகவை தனித்துப் போட்டியிட வைத்து தனிப்பெரும் எதிர்க்கட்சியாக உருவாக்கி காட்டினார் எல்.கே. அத்வானி. பிரதமர் மோடியின் பீகார் சாதனை இந்த வரலாற்றை திரும்ப நினைவூட்டுகிறது. அன்று அத்வானியைப் போல இன்று பாஜகவை உயரத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் பிரதமர் மோடி.

காட்டாட்சியின் இளவரசர்
இன்னொரு பக்கம் அனுபவமே இல்லாதவர்; ராஜா வீட்டு கன்னுகுட்டி, இளவரசர் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டவர் ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ்.. ஆனால் மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் காங்கிரஸ்-இடதுசாரிகளை அரவணைத்து ஒரு மெகா கூட்டணியை உருவாக்கினார் தேஜஸ்வி. தேர்தல் களத்திலும் பிரதமர் மோடி எனும் மிகப் பெரிய ஆளுமையை எதிர்த்து 30 வயது இளைஞராக களமாடினார்.

மாவோயிஸ்டுகள்
இப்போது ஆர்ஜேடியை மாநிலத்தின் தனிப்பெரும் கட்சியாக உருவாக்கி காட்டியிருக்கிறார். தேஜஸ்வி யாதவ் கவனமாக உருவாக்கிய கூட்டணியில் காங்கிரஸ்தான் சொதப்பியது. ஆனால் எந்த சூழ்நிலையிலும் பாஜகவிடம் போய்சேராத நம்பிக்கையான கட்சிகளாக நம்பிய இடதுசாரிகள், மிகப் பெரும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கின்றனர். ஆயுதம் ஏந்திய மாவோயிச பாதையில் இருந்து மக்கள் பாதைக்கு திரும்பிய மாஜி நக்சல்ல்களுக்கு மகத்தான வரவேற்பை மக்கள் அளித்திருக்கின்றனர். தேஜஸ்வியின் வியூகம் அபாரமாக வேலை செய்திருக்கிறது.

பரிதாப நிதிஷ்குமார்
ஆகையால்தான் பீகார் தேர்தலில் வெற்றியாளர்கள் என்றால் அது பிரதமர் மோடியும் தேஜஸ்வி யாதவும்தான். பீகார் முதல்வர் நிதிஷ்குமாரைப் பொறுத்தவரையில் கூடவே இருந்து குழிபறிக்கிறது பாஜக என தெரிந்தும் அமைதி காத்து அதன் பலனையும் அனுபவித்து இன்னமும் மவுனியாகவே இருக்கிறார். தங்களுடைய வாக்குகளை கபளீகரம் செய்து கொண்டு தங்களையே பாஜக கபளீகரம் செய்துவிட்டதை பார்த்து பரிதாபத்துக்குரியவராக மாறி இருக்கும் நிதிஷ்குமார், பீகார் தேர்தலில் தோற்றுப் போன ஒரு மனிதர்தான்.












Click it and Unblock the Notifications