விஜயின் அதே அரசியல் பிளான்? பீகாரில் விஜய் ஸ்டைலில் வாக்குகளை பிரிக்கும் பி.கே.. ஷாக்கிங் சர்வே!
பாட்னா: பீகார் மாநில சட்டசபை தேர்தல் தொடர்பான கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. நேற்று வெளியான ஜேவிசி அமைப்பின் கருத்துக் கணிப்பின்படி, ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA), பீகாரில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் இக்கூட்டணி 120 முதல் 140 இடங்களை வெல்லக்கூடும் என இந்த கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. அதேசமயம், மகாகத்பந்தன் (MGB) எனப்படும் காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி 93 முதல் 112 இடங்களை மட்டுமே பெறக்கூடும். அங்கே மெஜாரிட்டி பெற 122 இடங்களில் வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் மாநிலத்தில் 243 தொகுதிகள் உள்ளன. இதற்கு வருகிற நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆளும் ஜேடியூ, தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைக்க முயற்சி செய்கிறது.
ஜேவிசி அமைப்பின் கருத்துக் கணிப்பு
பாஜக - ஜேடியூவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 41% முதல் 43% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியின் 39% முதல் 41% வரையிலான வாக்கு சதவீதத்தை விட சற்றே அதிகமாகும். பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன சூராஜ் கட்சிக்கு 6% முதல் 7% வாக்குகள் கிடைக்கும் என்றும், மற்ற பிராந்திய கட்சிகள் சுமார் 10% முதல் 11% வாக்குகளைப் பெறலாம் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாரதிய ஜனதா கட்சி (BJP) உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக 70 முதல் 81 இடங்களையும், அதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) 42 முதல் 48 இடங்களையும் கைப்பற்றும். லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 முதல் 7 இடங்களையும், இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற) இரண்டு இடங்களையும், ராஷ்டிரிய லோக் சமதா கட்சி ஒன்று அல்லது இரண்டு இடங்களையும் பெற வாய்ப்புள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணியில், ராஷ்டிரிய ஜனதா தளம் (RJD) 69 முதல் 78 இடங்களையும், காங்கிரஸ் 9 முதல் 17 இடங்களையும், சிபிஐ(எம்எல்) 12 முதல் 14 இடங்களையும், சிபிஐ மற்றும் சிபிஐ(எம்) தலா ஒன்று அல்லது இரண்டு இடங்களையும் வெல்லக்கூடும்.
பிரசாந்த் கிஷோர்
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தலில் 2026ல் விஜய் பெரிய அளவில் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் பெரும்பாலும் சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், முக்கியமாக கிறிஸ்துவர்களின் வாக்குகளை பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தேர்தல் முடிவுகளை வெகுவாக பாதிக்கும். முக்கியமாக 2-5 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பலர் தோல்வியை தழுவும் வாய்ப்புகள் உள்ளன.
இதே அரசியலைத்தான் இந்த பீகார் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணியான மகாகத்பந்தன் கூட்டணியின் வாக்குகளை அவர் வெகுவாக பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பீகார் முதல்வர் பதவி
முதலமைச்சர் பதவிக்கு மிகவும் பிரபலமான தேர்வாக தேஜஸ்வி யாதவ் 33% ஆதரவுடன் முன்னிலையில் உள்ளார். நிதிஷ் குமார் 29% ஆதரவுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். சிராக் பாஸ்வான் மற்றும் பிரசாந்த் கிஷோர் தலா 10% ஆதரவைப் பெற்றுள்ளனர். துணை முதலமைச்சர் சாம்ராட் சவுத்ரிக்கு 9% ஆதரவு உள்ளது. ஏறத்தாழ 4% வாக்காளர்கள் வேறு ஒரு பாஜக தலைவரை முதலமைச்சராக விரும்புகிறார்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தலை நடத்தவுள்ளது. வாக்கு எண்ணிக்கை நவம்பர் 14 அன்று நடைபெறும். சமீபத்திய வாக்காளர் பட்டியலில் 7.42 கோடி வாக்காளர்கள் உள்ளனர். முன்பு இருந்த 7.89 கோடி வாக்காளர்களில் சுமார் 65 லட்சம் செயலற்ற பெயர்கள் நீக்கப்பட்டதால் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
2020 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை இடங்களைப் பெற்றது. அதில் பாஜக 74 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் கைப்பற்றின. இம்முறையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுவான வெற்றியைப் பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் கட்சிக்கு எதிரான அலை இருந்தாலும், நிதிஷ் குமாரின் நீண்டகால அரசியல் செல்வாக்கு இன்னும் குறையவில்லை என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications