தனக்கு எதிராக போராடிய பாஜகவினரை அழைத்து.. சாக்லேட் கொடுத்த ராகுல் காந்தி!
பாட்னா: ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பாஜகவினர் போராட்டம் நடத்திக்கொண்டிருந்த நிலையில், அந்த வழியாக சென்ற ராகுல் காந்தி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை அழைத்து சாக்லேட் கொடுத்திருக்கிறார்.
பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கை கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நடவடிக்கையின் மூலம் 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. ஆனால் இதை ஏற்காத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், பாஜக தேர்தல் ஆணையத்தின் உதவியின் மூலம் வாக்கு திருட்டில் ஈடுபட்டிருப்பதாக விமர்சித்துள்ளன. இந்த விவகாரத்தை மக்கள் மத்தியில் பேசுபொருளாக மாற்ற காங்கிரஸ் சார்பில் வாக்காளர் அதிகாரம் யாத்திரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பீகார் முழுவதும் ராகுல் காந்தி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தர்பங்காவில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா அமைப்பினர் காங்கிரஸுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். காங்கிரஸ் மேடையில் வைத்து பிரதமரையும், அவரது தாயையும் தொண்டர் ஒருவர் அவதூறாக பேசியிருந்தார். இந்த சம்பவத்தை கண்டித்தும், காங்கிரஸ் கட்சியை கண்டித்தும் இந்த போராட்டம் நடந்தது. அந்த வழியாக காரில் வந்த ராகுல் காந்தி உடனே காரை நிறுத்தி போராட்டக்காரர்களை அழைத்து சாக்லேட் கொடுத்திருக்கிறார். இந்த சம்பவம் பீகார் அரசியலில் கவனம் பெற்றிருக்கிறது.
முன்னதாக அவதூறு பேச்சு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபரை காவல்துறை கைது செய்திருந்தது. அதேபோல, பாட்னாவில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே இந்த விவகாரம் தொடர்பாக கைகலப்பும் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications