வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. பீகாரில் பேரணியை தொடங்கினார் ராகுல் காந்தி
பாட்னா: கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்கு திருட்டு நடைபெற்றதாகவும், இதற்காக பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உதவியதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இந்த பிரச்சனையை மக்கள் கவனத்திற்கு கொண்டு செல்ல பீகாரில் இன்று ராகுல் காந்தி பேரணியை தொடங்கியுள்ளார்.
பீகாரின் சசாரத்தில் தொடங்கும் இந்த பேரணியில் பீகார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் பங்கேற்றிருக்கின்றனர். செப்.1ம் தேதி பாட்னாவில் இந்த பேரணி முடிவடைகிறது.

கடந்த 7ம் தேதி ராகுல் காந்தி மிக முக்கியமான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதாவது கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலின்போது பல தொகுதிகளில் வாக்கு திருட்டு நடந்திருக்கிறது என்பதுதான் அவரது குற்றச்சாட்டு. போலி முகவரி, இல்லாத ஆட்களை இருப்பதாக கணக்கு காட்டுவது, ஒரே இடத்தில் அதிகமான ஆட்களை இருப்பதாக சொல்லியிருப்பது என பல வழிகளில் போலியான வாக்காளர்கள் உருவாக்கப்பட்டு வாக்குகள் திருடப்பட்டிருக்கிறது என்று விமர்சித்திருந்தார்.
பாஜக இதற்காக சதி செய்ததாகவும், இந்த சதிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உடந்தை என்றும் விமர்சித்திருந்தார். இதற்கு ஆதாரமாக சில டேட்டாக்களையும் காட்டியிருந்தார். குறிப்பாக பெங்களூர் மத்திய மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மகாதேவபுரா சட்டமன்ற தொகுதியில் மொத்தமுள்ள 6.5 லட்சம் வாக்காளர்களில் சுமார் 1 லட்சம் வாக்குகள் திருடப்பட்டிருக்கிறது என்றும், இப்பகுதியில் பூத் எண் 470இல் உள்ள முனிரத்னா லே அவுட்டில் உள்ள ஒரே வீட்டில் சுமார் 80 வாக்காளர்கள் போலியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியிருந்தார்.
சுமார் 10-15 சதுர அடி கொண்ட இந்த வீட்டில் அதிகபட்சமாக மூன்று பேர் வரை தங்க முடியும். ஆனால் இங்கு 80 வாக்களார்கள் இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியிருந்தாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து இந்த பகுதியில் சென்று தனியார் செய்தி ஊடகங்கள் ஆய்வை மேற்கொண்டன. ஆய்வில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு உண்மை என்று கூறியிருந்தன.
அதேபோல பீகார் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதாதள கட்சி மேற்கொண்ட கள ஆய்வில் வாக்காளர் பட்டியலில் 3 லட்சம் வீடுகளின் முகவரி எண் "0" என குறிப்பிடப்பட்டுள்ளது தெரியவந்தது. இது எப்படி சாத்தியம் என்று இக்கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல, பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இதில் 65 லட்சம் பேரின் பெயர்கள் விடுபட்டு போயிருந்தன. கேட்டால், உயிரிழந்தவர்கள், புலம் பெயர்ந்தவர்கள்தான் இவர்கள் அனைவரும் என்று தேர்தல் ஆணையம் கணக்கு சொன்னது. சரி இந்த பட்டியலை கொடுங்கள் என்று கோரினால் ஆணையம் கொடுக்க மறுத்தது. இதனையடுத்து நீதிமன்றம் மூலம் எதிர்க்கட்சிகள் இந்த பட்டியலை வாங்கியுள்ளன.
இந்நிலையில்தான் இந்த பிரச்சனைகளை மையப்படுத்தி பீகாரில் பேரணியை ராகுல் காந்தி இன்று தொடங்கியுள்ளார். வாக்கு திருட்டு பிரச்சனையை மக்கள் பிரச்சனையாக மாற்ற இந்த பேரணியை நடத்துவதாக இந்தியா கூட்டணி கட்சிகள் கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications