பீகார் தேர்தல்: நிதிஷ்குமாருக்கு கூட இருந்தே ஆப்பு வைக்கும் பாஜக.. பூமராங் போல திருப்பி தாக்கும்?
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி நடத்தும் உள்ளடி தில்லாலங்கடி வேலைகளை ஐக்கிய ஜனதா தளம் மவுனமாக பார்த்து கொண்டே இருக்கிறது. இந்த சித்துவேலைகளுக்கு சரியான தருணத்தில் நிதிஷ்குமார் பதிலடி தருவார் என்பது ஐக்கிய ஜனதா தளத்தலைவர்களின் கருத்து.
பீகார் சட்டசபை தேர்தலில் ஜேடியூ-பாஜக ஒரு அணியாகவும் ஆர்ஜேடி-காங்கிரஸ்- இடதுசாரிகள் ஒரு அணியாகவும் களத்தில் நிற்கின்றன. இந்த அணிகள் இல்லாமல் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி, மாயாவதியின் பகுஜன் சமாஜ், பப்பு யாதவின் ஜன் ஆதிகார் கட்சி ஆகியவை தனியே 3 அணிகளாக களமிறங்கி இருக்கின்றன.

ஜேடியூவை எதிர்த்து எல்ஜேபி
இதில் உச்சக்கட்ட வேடிக்கையே ஜேடியூ-பாஜக கூட்டணிதான். இந்த கூட்டணியில் இதுவரை இடம்பெற்றிருந்த ராம்விலாஸ் பாஸ்வானின் கட்சி இப்போது பாஜகவுடன் மட்டுமே கூட்டணி என அறிவித்திருக்கிறது. அத்துடன் பாஜகவின் கூட்டணி கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தை எதிர்த்து வேட்பாளர்களை நிறுத்துவோம் என்கிறது.

பாஜகவும் வித்தியாசமான பார்முலாவும்
இதனால் கடுப்பாகிப் போன ஜேடியூ, முதலில் பாஸ்வானின் லோக் ஜனசக்தியுடனான கூட்டணியை முறிக்க வழியை பாருங்க.. ஒரே நேரத்தில் 2 படகுகளில் சவாரி செய்கிற வேலை எல்லாம் சரிப்படாது. இதனால் பேரழிவுதான் ஏற்படும் என கறார்காட்டி இருக்கிறது. ஆனாலும் லோக் ஜனசக்தியை கூடவே வைத்துக் கொண்டு ஜேடியூவுடனும் கூட்டணி என்கிற விநோத பார்முலாவை கடைபிடிப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது.

பாஜகவின் கணக்கு இதுதான்..
இதற்கு காரணமே, நிதிஷ்குமார்தான் முதல்வர் வேட்பாளர் என்பதை வேறுவழியே இல்லாமல் பாஜக ஏற்றிருப்பதுதான். அதிக இடங்களில் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஜெயிப்பதை துளியும் கூட பாஜக விரும்பவில்லை. தற்போதைய நிலையில் லோக்ஜனசக்தி, ஜேடியூவுக்கு எதிராக களமிறங்கினால் குறைந்தது 30 தொகுதிகளில் நிதிஷ்குமார் கட்சியின் வெற்றி பறிபோய்விடும். இதனால் பீகாரில் தங்களது கை ஓங்கிவிடும் என்பதுதான் பாஜகவின் கணக்கு.

நிதிஷ் பதிலடி தருவார்
பாஜக இப்படி கணக்குப் போட்டால் கில்லாடி நிதிஷ்குமார் வேறு பதிலடி தரமாட்டாரா என்ன? கூட்டணிக்குள்ளே இருந்து கொண்டு குழிபறிக்கும் பாஜகவுக்கு நிச்சயம் நிதிஷ்குமார் தர்ம அடி கொடுப்பார் என்பதுதான் பீகார் அரசியலை அறிந்தவர்களின் கருத்து. மகாராஷ்டிராவில் பாஜக இதேபோக்கைத்தான் கடைபிடித்தது. சிவசேனாவுக்கு அதிக இடங்கள் கிடைக்கக் கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருந்தது. இதன் விளைவு சிவசேனா-காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் என மெகா கூட்டணி அரசு உதயமானது. பாஜகவின் கனவு மண்ணோடு மண்ணாகிப் போனது.

மகாராஷ்டிரா போலவே..
மகாராஷ்டிராவில் சிவசேனா எப்படி விஸ்வரூபம் எடுத்து பாஜகவுக்கு எதிராக நின்றதோ அதே வேலையை நிதிஷ்குமார், பீகாரில் செய்வதற்கு ரொம்ப நேரமாகாது. ஏனெனில் ஆர்ஜேடியுடன் இணைந்து கூட்டணி அரசை நடத்தியவர்தான் நிதிஷ்குமார். சட்டசபை தேர்தலுக்கு பின் பாஜக அதிக இடங்களைப் பெற்றாலும் கூட நிதிஷ்குமார்- ஆர்ஜேடி- காங்கிரஸ்- இடதுசாரிகள் இணைந்து புதிய அரசு உருவாவதற்கான் வாய்ப்புகளை ஒருபோதும் நிராகரித்துவிடவும் முடியாது என்கின்றன பீகார் தகவல்கள்.












Click it and Unblock the Notifications