லாலு கட்சி ஆட்சிக்கு வரவே கூடாது.. 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 வழங்கும் திட்டத்தை தொடங்கி மோடி கோரிக்கை
பாட்னா: விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பெண்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் 75 லட்சம் பெண்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்கும் ‛முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் திட்டத்தை' பிரதமர் மோடி இன்று பீகாரில் தொடங்கி வைத்தார். அதன்பிறகு பேசிய மோடி, "லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும்'' என்று வலியுறுத்தினார்.
பீகாரில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் பொறுப்பு வகித்து வருகிறார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த மாதம் தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த தேர்தலில் மீண்டும் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன. அதேவேளையில் லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி எனும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் - காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வருகின்றன.
இந்நிலையில் தான் 'முக்கியமந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா' என்ற புதிய திட்டத்தை பீகாரில் பிரதமர் மோடி தொட்ங்கி வைத்தார். பீகாரில் உள்ள 75 லட்சம் பெண்கள் சுயதொழில் தொடங்க உதவும் வகையில் அம்மாநில அரசும், மத்திய அரசும் சேர்ந்து இந்த திட்டத்தை வகுத்தது. மத்திய அரசு சார்பில் ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண்கள் கால்நடை வளர்ப்பு, விவசாயம், கைவினை பொருள் சார்ந்த தொழில் தொடங்கவோ அல்லது விரிவாக்கம் செய்யவோ உதவும் என்ற வகையில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 6 மாத ஆய்வுக்கு பிறகு, பணம் பெற்றவர்களின் தொழில் திறன் எப்படி உள்ளது என்று ஆய்வு செய்து அதனடிப்படையில் ரூ.2 லட்சம் கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த திட்டம் பீகாரில் பாஜக கூட்டணிக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தை பிரதமர் மோடி காணொளி காட்சி மூலமாக டெல்லியில் இருந்து தொடங்கி வைத்தார். அதன்பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
பெண்கள் முன்னேறும்போது மொத்த சமூகமே முன்னேறும். அரசு சார்பில் பெண்களின் மேம்பாட்டை மையப்படுத்தியே ஒரு அரசாங்கம் கொள்கைகளை வகுக்கும்போது, அதன் நன்மைகள் சமூகத்தின் பிற பிரிவுகளுக்கும் நீட்டிப்பு செய்யப்படும். உஜ்வாலா திட்டத்தால் ஏற்பட்ட மாற்றம் உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு பெண்ணும் பலனடையும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக சுமார் 75 லட்சம் பெண்கள் பயனடைவார்கள்..ஒவ்வொருவரின் வங்கிக் கணக்குகளுக்கும் ஒரே நேரத்தில் ரூ.10,000 மாற்றப்பட உள்ளது. ஒரு பெண் வேலை செய்யும்போது அல்லது சுயதொழில் செய்யும்போது அவர்களுக்கான புதிய கனவுகள் சிறகடிக்க தொடங்குகின்றன. சமூகத்தில் பெண்களுக்கான மரியாதை அதிகரிக்கிறது.
11 ஆண்டுகளுக்கு முன்பு ஜன் தன் யோஜனா திட்டத்தைத் தொடங்கியது. 30 கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்குகளை திறந்ததது செல்போன் எண்களை ஆதாருடன் இணைத்ததால் தான் அரசின் திட்டங்களை நேரடியாக வங்கி கணக்குகளில் பெற முடிகிறது. பீகார் பெண்களுக்கு இப்போது நிதிஷ் மற்றும் மோடி என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளனர். உங்களின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவோம்.
பீகாரில் ஏற்கனவே 11 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த மாத தொடக்கத்தில், ஜீவிகா நிதி கடன் கூட்டுறவு சங்கத்தைத் தொடங்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த அமைப்பின் பலம் இப்போது முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனாவுடன் ஒருங்கிணைக்கப்படும். இது பீகார் முழுமைக்கும் பெரிய பலனை தரும்.
பீகாரில் ஆட்சி செய்யும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறோம். ஆர்ஜேடி தலைமையிலான கூட்டணி கட்சியினரின் ஆட்சியில் பெண்கள் அதிக சிரமங்களை எதிர்கொண்டனர். துன்பங்களை எதிர்கொண்டனர்.
சாலைகள் இல்லாமல் இருந்தது. சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் இருந்தது. ஆனால் தற்போது சட்டத்தின் ஆட்சி நடக்கிறது. நிதீஷ் குமார் அரசில் பெண்கள் பாதுகாப்பாக உணர்கிறார்கள். எனவே, ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மீண்டும் ஆட்சிக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.












Click it and Unblock the Notifications