லாலு பிரசாத் யாதவ் கையில் கருங்காலிக்குச்சி! மாயமில்லை மந்திரமில்லை! அப்படி என்ன தான் சக்தி இருக்கு?
பாட்னா: ஒரு காலத்தில் மாய மந்திர வேலைகள் பார்ப்பவர்களிடம் மட்டும் இருந்த கருங்காலிக்குச்சிகளை, அண்மைக்காலமாக அரசியல்வாதிகள் கைகளிலும் பார்க்க முடிகிறது.
எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பீகார் சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மரியதை நிமித்தமாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவை அவரது இல்லம் தேடிச்சென்று சந்தித்து பேசினார். அப்போது லாலு பிரசாத் யாதவ் அருகே உள்ள மேஜையில் அவர் பயன்படுத்தி வரும் கருங்காலிக்குச்சி வைக்கப்பட்டிருந்தது.

முதலமைச்சர் ஸ்டாலினும் கூட தனது காலை நேர நடைபயிற்சியின் போது கையில் கருங்காலிக்குச்சியை வைத்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வெங்கய்ய நாயுடு உட்பட இன்னும் பல அரசியல் தலைவர்கள் கருங்காலிக்குச்சியை பயன்படுத்தி வருகின்றனர்.
கருங்காலிக்குச்சிக்கு அப்படி என்ன தான் ஆற்றல் உண்டு என்ற கேள்வி பலருக்கும் எழலாம். கருங்காலி மரத்தை மற்ற மரங்களை போல் அவ்வளவு சாதாரணமாக எடை போட்டுவிட முடியாது. நாளாக நாளாக கருமை அடையக் கூடிய மரம் தான் இந்த கருங்காலிமரம். கருங்காலி மரத்தை பொறுத்தவரை எதையும் இழுத்து வைத்துக்கொள்ளும் தன்மையுடையது.
மின்னல் தாக்கினாலும் கூட கருங்காலி மரம் சேதமடையாது, காரணம் என்னவென்றால் அந்த மரம் இயல்பிலேயே மிகவும் உறுதியானது. உறுதியான உடல்கட்டு மிக்க நபரை கருங்காலி கட்டை மாதிரி இருக்கானே என கிராமப்புறங்களில் சொல்வதுண்டு. கருங்காலிக்குச்சி கையில இருந்தால் அதன் வீச்சு காரணமாக நம்பிக்கையும், மன உறுதியும் நமக்கு அதிகமாகும் எனக் கூறப்படுகிறது.
கருங்காலி மரமானது தேக்கு மரத்தை விட விலை உயர்ந்தது. அதேபோல் கருங்காலி மரத்தை பச்சைத் தங்கம் என்றழைக்கிறார்கள். அந்தளவுக்கு அந்த மரத்திற்கு மவுசு உள்ளது. கருங்காலிக்குச்சியின் சக்தி பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கக்கூடிய ஆற்றம் அதற்கு உண்டு.
மற்றபடி இந்தக் கோலில் மாயமும் இல்லை, மந்திரமும் இல்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாகும். நல்ல சக்திகளை ஈர்க்கும் என்பதாலேயே அரசியல்வாதிகள் இந்தக் கோலை பயன்படுத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications