அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர்.. பீகார் மாணவருக்கு ரூ.1.8 கோடி சம்பளம்! அமேசானின் டாப் ஆஃபர்
பாட்னா: பீகாரை சேர்ந்த என்.ஐ.டி மாணவருக்கு ரூ.1.8 கோடி சம்பளத்தில் வேலை வழங்க அமேசான் நிறுவனம் முன்வந்து உள்ளது.
பீகார் தலைநகர் பாட்னாவை சேர்ந்தவர் அபிசேக் குமார். அங்குள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனமான என்.ஐ.டியில் கணினி பொறியியல் படிப்பை படித்து வந்து உள்ளார். இறுதியாண்டில் இருந்து வரும் மாணவர் அபிசேக், கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் தேதி கோடிங் தேர்வு ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார்.

அதில் வெற்றிபெற்ற மாணவர் அபிசேக், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டு இருக்கிறார். 3 சுற்றுகளை கொண்ட அந்த நேர்காணலை அயர்லாந்து மற்றும் ஜெர்மனி நாடுகளை சேர்ந்த நிபுணர்கள் நடத்தி இருக்கிறார்கள். இதில் அபிசேக் சிறப்பாக செயல்பட்டு நேர்காணலை நடத்தியவர்களின் கவனத்தை ஈர்த்து உள்ளார்.
குறிப்பாக பிளாக் செயின் தொழில்நுட்பம் தொடர்பான விபரத்தை கூறி அவர்களை வியக்க வைத்து உள்ளார். 3 நேர்காணல்களிலும் வெற்றிபெற்ற அபிசேக்கிற்கு வேலை வழங்க உலகின் தலைசிறந்த தொழில்நுட்ப நிறுவனமான அமேசான் முன்வந்து இருக்கிறது. அமேசான் போன்ற நிறுவனத்தில் வேலை கிடைப்பதே பெரும்பாலான பொறியியல் மாணவர்களின் கனவாக இருக்கிறது.
இந்த சூழலில், அங்கு வேலை வாய்ப்பை பெற்ற அபிசேக்கிற்கு அந்த நிறுவனம் தர முன் வந்த ஊதியம்தான் அனைவரையும் வாய்பிளக்க செய்து இருக்கிறது. ஆம், ஆண்டுக்கு ரூ.1.8 கோடி ஊதியத்தை அபிசேக் குமாருக்கு வழங்க அமேசான் நிறுவனம் முன்வந்து இருக்கிறது. இதனை கேட்டு அனைவரும் மலைத்துப்போய் அபிசேக்கிற்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஆண்டுக்கு ரூ.1.8 கோடி ஊதியம் என்றால் ஒரு மாதத்துக்கு அவருக்கு ரூ.15 லட்சம் ஊதியம் வழங்குகிறது அமேசான் நிறுவனம். அமேசானில் அதிக ஊதியத்தை வேலை பெற்ற அபிசேக் குமாருக்கு இனிப்புகள் வழங்கி அவரது குடும்பத்தினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன் இதே பாட்னா என்.ஐ.டியில் படித்த ஒருவர் அதிக ஊதியத்துடன் பேஸ்புக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
அவர் பெயர் அதிதி திவாரி. எலெக்டிரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் எஞ்சினியரிங் படித்த அவருக்கு பேஸ்புக் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1.6 கோடி ஊதியம் வழங்க முன்வந்தது. இவரது தாய் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். தந்தை டாடா ஸ்டீர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதிதிக்கு முன்பாக இதே பாட்னா என்.ஐ.டியில் படித்த சம்பிரீத்தி யாதவ் என்பவருக்கு கூகுள் நிறுவனத்தில் ரூ.1.11 கோடி ஆண்டு சம்பளம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications