பீகாரில் மக்களை ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக்கும் வங்கி.. அதிர வைக்கும் பின்னணி
பாட்னா: பீகாரில் அடுத்தடுத்து நடக்கும் வங்கி குளறுபடிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அண்மையில் ஒருவரின் வங்கி கணக்கில் 5 லட்சம் வந்தது. அடுத்ததாக இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் சுமார் 960 கோடி வரவு வைக்கப்பட்டதாக காட்டியது பூதாகரமானது. இந்நிலையில் புதிதாக மேலும் ஒருவரின் வங்கிக் கணக்கில் ரூ.52 கோடி திடீர் வரவு வைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள பக்தியார்பூர் கிராமத்தைச் சேர்ந்த ரஞ்சித் தாஸ் என்பவரது வங்கி கணக்கிற்கு ரூ. 5லட்சம் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது. அந்த பணத்தை அவர் உடனடியாக எடுத்து செலவு செய்துவிட்டார்.
அந்தப் பணத்தைத் திருப்பி அனுப்ப வங்கி நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பிய நிலலையில் பணத்தை திருப்பி செலுத்த அவர் முன்வரவில்லை. இதையடுத்து, வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. புகாரின் பேரில் ரஞ்சித் தாஸை போலீசார் கைது செய்தனர்.

5 லட்சம்
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், "பிரதமர் மோடி ரூ.15 லட்சம் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தார். அதில் முதல் தவணையாக ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தார் என நினைத்து எடுத்துச் செலவு செய்தேன்" என்று கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் உண்மையை விளக்கி பணத்தை திரும்ப வாங்க முயற்சி செய்து வருகிறார்கள்.

சிறுவர்கள் கணக்கு
இந்த சூழலில் தான் பீகார் மாநிலத்தில் உள்ள கதிஹார் என்ற மாவட்டத்தில் வசிக்கும் இரண்டு சிறுவர்களின் வங்கி கணக்கில் கடந்த வாரம் ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கதிஹார் மாவட்டம், பாஸ்தியா என்ற கிராமத்தைச் சேர்ந்த குருச்சந்திர விஸ்வாஸ், ஆசித் குமார் ஆகிய இரண்டு சிறுவர்களுக்கு பள்ளியின் சார்பில் கிராம வங்கியில் உருவாக்கிக் கொடுக்கப்பட்ட வங்கிக் கணக்கில் திடீரென நேற்று முன்தினம் இரவு ரூ.960 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ள்து.

செல்போனில் எஸ்எம்எஸ்
வங்கிக் கணக்கில் ரூ.960 கோடி டெபாசிட் ஆனது குறித்து செல்போனில் வந்த தகவலையடுத்து, இரு சிறுவர்களும் தங்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவித்துள்ளார்கள்.. இதைபார்த்து திகைத்துப்போன பெற்றோர் ஏடிஎம் சென்று வங்கியின் கணக்கு குறித்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.

பெற்றோர் தகவல்
அப்போது, இதில் ஆசித் குமார் கணக்கில் ரூ.60 கோடியும், குருச்சந்திர விஸ்காஸ் கணக்கில் ரூ.900 கோடியும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள். இதையடுத்து, சிறுவர்களின் பெற்றோர் உடனடியாக வங்கிக்குச் சென்று இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார்கள். வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து ஆய்வு செய்தபோது, கணக்கில் குறைந்தபட்ச பணம் மட்டுமே இருந்தது, ஆனால், கணினியின் கணக்கில் ரூ.960 கோடி காட்டியது கண்டு குழம்பி போயினர்.

கணக்கில் குறைவான பணம்
வங்கியின் கணினிச் செயல்பாட்டு முறையில் சில கோளாறுகள் நடந்திருக்கலாம் என வங்கியின் மேலாளர் கூறினார். சிறுவர்களின் கணக்கில் குறைவான பணம் இருக்கிறது. ஆனால், கணினியின் கணக்கில் ரூ.960 கோடி காட்டுகிறது என்று வங்கி மேலாளர் விளக்கம் அளித்தார்.

புதிய தவறு
இந்நிலையில் பீகாரின் முசாபர்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தராம் பகதூர் ஷா என்பவர் ஓய்வூதியம் வாங்கி காலத்தை ஓட்டி வருகிறார். இவர் கணக்கு குறித்து சில விவரங்களை கேட்பதற்காக அருகில் உள்ள வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள், அவரது வங்கிக் கணக்கை சோதனை செய்தபோது அதில்ரூ.52 கோடி இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக ராம் பகதூரிடம் கேட்டிருக்கிறார்கள். ஆனால் அவரோ தனக்கு எதுவும் தெரியாது என்று கூறி அதிர்ச்சி அடைந்தார்.

அதிகாரிகளிடம் விசாரணை
இதனால் வங்கி நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இந்த விவகாரம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளிடம் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து விவசாயி ராம் பகதூர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "எனது வங்கிக் கணக்கில் 3 ஆயிரம் ரூபாயை விட அதிகமாக நான் பார்த்ததில்லை. தற்போது ரூ.52 கோடி இருப்பதாக கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இது தவறுதலாக செலுத்தப்பட்ட பணம். எனினும், எனது வறுமை நிலையை கருத்தில்கொண்டு இந்த தொகையில் மிகச்சிறிய பங்கை மட்டும் அரசு எனக்கு தந்தால் மகிழ்ச்சி அடைவேன்" என்று கூறியுள்ளார். பீகாரில் கோடிக்கணக்கில் தவறாக வரவு வைக்கும் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications