வரலாற்றில் முதல் முறை.. நிதிஷ் குமாருக்கு பதில் பீகார் முதல்வரானார் பாஜகவின் சாம்ராட் சவுத்ரி.. யார் இவர்? சுவாரசியம்
பாட்னா: பீகார் முதல்வராக இருந்த நிதிஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பீகாரின் புதிய முதல்வராக பாஜகவின் சாம்ராட் சவுத்ரி தேர்வான நிலையில் அவர் இன்று முதல்வராக பதவியேற்றார். இதன்மூலம், பீகாரில் முதல் முறையாக பாஜகவை சேர்ந்தவர் முதல்வராகி உள்ளதோடு, நீண்டகாலமாக ஆட்சி புரிந்து வந்த நிதிஷ் குமாரின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.
பீகாரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பீகாரில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் பாஜக - நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் உள்பட பிற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பீகாரில் மொத்தம் 243 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

மெஜாரிட்டிக்கு 122 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இதில் இந்த கூட்டணி மொத்தம் 202 தொகுதிகளை கைப்பற்றியது. குறிப்பாக பாஜக 89 தொகுதிகளிலும், நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் 85 தொகுதிகளிலும் வென்றது. இதையடுத்து நிதிஷ் குமார் 10வது முறையாக பீகார் முதல்வரானார்.
நிதிஷ்குமார் ராஜினாமா
சமீபத்திய ராஜ்யசபா தேர்தலில் நிதிஷ்குமார் வென்றதால் நேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து முதல்வர் பதவியை பாஜகவிற்கு வழங்கினார். அதன்படி துணை முதல்வராக இருந்த சாம்ராட் சவுத்ரி முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று காலை 11 மணிக்கு பீகார் ராஜ்பவனில் பதவியேற்பு விழா நடந்தது.
முதல்வரான சாம்ராட் சவுத்ரி
பீகாரின் 21வது முதல்வராக சாம்ராட் சவுத்ரி பதவியேற்று கொண்டார். ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் பதவியேற்பு உறுதிமொழி மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். பீகாரை எடுத்து கொண்டால் இதுவரை பாஜகவை சேர்ந்த ஒருவர் முதல்வரானது இல்லை. ஆனால் தற்போது சாம்ராட் சவுத்ரி முதல்வராகி இருக்கிறார். இதன்மூலம் பீகார் வரலாற்றில் முதல் பாஜக முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சாம்ராட் சவுத்ரி யார்?
தற்போது முதல்வராகி உள்ள சாம்ராட் சவுத்ரி கடந்த 2017 ம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். இவருக்கு வயது 57 இவர் பீகார் அரசியலில் மிகவும் முக்கியமாக கருதப்படும் கோயரி சமுதாயத்தை சேர்ந்தவர். இது ஓபிசி சமுதாயமாகும். இவர் முதலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியில் செயல்பட்டார்.
1999ல் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆட்சியில் முதல்வராக இருந்த ராப்ரி தேவி, சாம்ராட் சவுத்ரிக்கு அமைச்சர் பதவியை வழங்கினார். அதன்பிறகு கட்சியில் தலைமை கொறடாவாக செயல்பட்டார். கடந்த 2014ல் அந்த கட்சியில் இருந்து விலகி ஜிதன் ராம் மாஞ்சியின் கட்சியில் சேர்ந்தார். அதன்பிறகு 2017 ல் பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்து 9 ஆண்டுகள் ஆகும் நிலையில் முதல்வராக உயர்ந்துள்ளார்.
எதிரியாக இருந்து நெருக்கம்
ஒருகாலத்தில் நிதிஷ் குமாரை கடுமையாக எதிர்க்கும் தலைவராக வலம் வந்தவர் சாம்ராட் சவுத்ரி. நிதிஷ் குமாரை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவேன் என்று சபதம் ஏற்று இருந்தார். ஆனால் ஐக்கிய ஜனதாதளம் - பாஜக கூட்டணி அமைக்கும் நிலை உருவானது. இதனால் அவர் நிதிஷ் குமாருடன் இணக்கமானார். . நிதிஷ் குமார் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகவும், துணை முதல்வராகவும் செயல்பட்டு வந்தார். நிதிஷ் குமார் ராஜினாமாவை தொடர்ந்து நேற்றைய தினம் பாஜகவின் சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
எந்த சமுதாயத்தை சேர்ந்தவர்
மேலும் சாம்ராட் சவுத்ரி கோயரி சமுதாயத்தின் 2வது முதல்வராவார். இந்த சமுதாயத்தை சேர்ந்த சதீஷ் பிரசாத் சிங் கடந்த 1968 ம் ஆண்டில் 5 நாட்கள் முதல்வராக இருந்தார். அதன்பிறகு முதல்வர் பதவி அந்த சமுதாயத்தை சேர்ந்தவருக்கு கிடைக்காத நிலையில் தற்போது சாம்ராட் சவுத்ரி அதனை பெற்றுள்ளார்.
அதுமட்டுமின்றி பீகார் முதல்வராக நீண்டகாலம் பதவி வகித்த பெருமை நிதிஷ் குமாருக்கு தான் உள்ளது. நிதிஷ் குமார் பீகார் முதல்வராக 10 முறை பதவி வகித்துள்ளார். கடந்த 2005ம் ஆண்டு முதல் (இடையே 2014 மே 20 முதல் 2015 பிப்ரவரி 22 வரை 278 நாட்கள் மட்டும் ஜிதன்ராம் மஞ்சி முதல்வராக இருந்தார்) நேற்று வரை அவர் முதல்வராக இருந்தார்.
மோடி – அமித்ஷா பங்கேற்கவில்லை
பீகாரில் முதல் முறையாக பாஜகவை சேர்ந்தவர் முதல்வராக பொறுப்பேற்றாலும் கூட இன்றைய பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவில்லை. பிற மாநிலங்களில் உள்ள பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை. பீகார் பாஜக தலைவர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே பங்கேற்றனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதுது.















Click it and Unblock the Notifications