தேர்தலில் வேட்பாளர்களை களமிறக்கும் சங்கராச்சாரியார்.. பீகாரில் பாஜகவுக்கு புதிய சிக்கல்!
பாட்னா: பீகாரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஜோதிர் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் வேட்பாளர்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளார். பசு பாதுகாப்பு தொடர்பாக வலியுறுத்தி வரும் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
பீகாரில் தற்போது ஐக்கிய ஜனதாதளம் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடக்கிறது. ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் நிதிஷ் குமார் முதல்வராக உள்ளார். விரைவில் அங்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

இதில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ் கூட்டணி இடையே போட்டி நிலவ உள்ளது. பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம் முக்கிய கூட்டணியாக உள்ளது. காங்கிரஸ் கூட்டணியில் பிரதான கட்சியாக லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சி இருக்கிறது. இதுதவிர இருகூட்டணியிலும் பிற கட்சிகளும் கைகோர்த்துள்ளன.
இந்நிலையில் தான் ஜோதிர் பீடத்தின் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். சங்கராச்சாரியார்களில் பிரபலமானவர்களில் ஒருவரான இவர் உத்தர பிரதேச மாநிலம் காசியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் தலைவர்களிடம் இருந்தும் பசு பாதுகாப்பு குறித்து கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். பசு பாதுகாப்புக்கு யார் உறுதுணையாக இருப்பார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. இதனால் பீகார் சட்ட சபை தேர்தல் மட்டுமின்றி பிற தேர்தல்களிலும் பசு மாதா பெயரில் வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளேன்.
பசு மாதாவுக்கு வாக்களிக்க விரும்புகிறவர்கள் அவர்களுக்கு வாக்களிக்கலாம். பசு மாதா தேசியத் தாயாக வேண்டும் என்ற எங்கள் எண்ணம் மேலும் வலுப்பெற வேண்டும். அதுவே எங்கள் விருப்பம்" என்று கூறினார்.
சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் பசு பாதுகாப்புக்காக தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். மேலும், மத்திய மற்றும் மாநில அரசுகள் மாட்டு இறைச்சி ஏற்றுமதிக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வருகிறார்.
மகாராஷ்டிராவின் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான ஆட்சி நடைபெற்றபோது, பசு மாதாவுக்கு மாநில தாய் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. இதுகுறித்து பேசிய சங்கராச்சாரியார், "மகாராஷ்டிரா முதலாவது மாநிலமாக பசு மாதாவுக்கு அரசு அந்தஸ்து வழங்கியதை நாங்கள் வரவேற்கிறோம். நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.
அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளது ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி இந்து மக்களின் ஓட்டுகளை அறுவடை செய்ய தயாராகி வருகிறது. இப்படியான சூழலில் சங்கராச்சாரியா சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் வேட்பாளர்களை நிறுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது பாஜக கூட்டணிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications