பீகாரில் மீண்டும் ஆட்சி அமைக்கும் நிதிஷ் - பாஜக கூட்டணி.. டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
பாட்னா: பீகார் தேர்தலில் பாஜக கூட்டணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக டைம்ஸ் நவ் தேர்தலுக்கு பிந்தையக் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. 142 முதல் 145 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும், "இந்தியா" கூட்டணி 88 முதல் 91 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
பீகார் மாநிலத்தில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகார் சட்டசபைக்கு வரும் 22 ஆம் தேதியோடு பதவி காலம் முடிவடைகிறது. இதனால் புதிய அரசை தேர்ந்தெடுக்க தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியினை அறிவித்தது.

அதன்படி தற்போது, பீகார் சட்டசபை தேர்தல் 2 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் உள்ள 243 சட்டசபை தொகுதிகளில், முதல்கட்டமாக 121 தொகுதிகளில் கடந்த 6 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் இதுவரை இல்லாத அளவாக அதிகமாக அதாவது 65.08 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.
இந்த நிலையில், மீதம் உள்ள 122 சட்டசபை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 20 மாவட்டங்களில் அடங்கியுள்ள 122 தொகுதிகளில் 1,302 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். 45 ஆயிரத்து 399 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
இதில் மாலை 5 மணி நிலவரப்படி பீகார் சட்டசபை தேர்தலிலேயே அதிகபட்சமாக 67.13 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பீகார் வரலாற்றிலேயே அதிக வாக்கு சதவீதம் பதிவாகியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் முடிந்துள்ளதால், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளது.
இதில் டைம்ஸ் நவ் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பின் படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும் என கூறியுள்ளது. அதாவது என்.டி.ஏ கூட்டணி 142 முதல் 145 தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் "இந்தியா" கூட்டணி 88 முதல் 91 தொகுதிகளில் வெற்றி பெறும் என டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சியை பிடிக்கும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 1 தொகுதியிலும், மற்றவை 5 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சி அமைக்க 122 தொகுதிகளில் வெற்றி பெற்றால் போதும் என்பதால், அதையும் தாண்டி, பாஜக நிதிஷ்குமார் கூட்டணி 142 தொகுதிகளில் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு முடிவுகள்:
* என்.டி.ஏ கூட்டணி: 142 -145 தொகுதிகள்
* இந்தியா கூட்டணி: 88 - 91 தொகுதிகள்
* ஜன் சுராஜ் - 1 தொகுதிகள்
* மற்றவை - 5 தொகுதிகள்
வரும் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. அப்போது ஆட்சியை பிடிப்பது எந்த கூட்டணி என்று தெரிய வரும்.












Click it and Unblock the Notifications