மதமோதல்.. "எனது பிள்ளைகளை இந்தியா வர வேண்டாம் என கூறிவிட்டேன்".. ஆர்ஜேடி தலைவர் சர்ச்சை பேச்சு
பாட்னா: "முஸ்லிம்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டப்படுவதால் எனது பிள்ளைகளை இந்தியா வர வேண்டாம் எனக் கூறிவிட்டேன்" என்று ராஷ்ட்ரிய ஜனதா தளக் கட்சியின் மூத்த தலைவர் அப்துல் பாரி சித்திக்கி பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இந்த பேச்சுக்கு பாஜகவும், வலதுசாரி அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. மேலும், அவரை குடும்பத்துடன் பாகிஸ்தான் சென்றுவிடுமாறும் பாஜக தலைவர்கள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய போதிலும், தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என அப்துல் பாரி சித்திக்கி கூறியுள்ளார்.
இருபக்கம் இஸ்லாமியர்கள்.. நடுவில் மோடி! முஸ்லிம், கிறிஸ்துவர் அமைதியா வாழலாம் - பாஜக டெய்சி ட்வீட்
வெறுப்பு பேச்சுகள் அதிகரிப்பு
இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்தது முதலாக, இந்து அல்லாத மதத்தினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, வட மாநிலங்களில் இந்தப் போக்கு அதிகம் காணப்படுகிறது. உதாரணமாக, பாஜக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் சிலரே முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக பேசியுள்ளனர். முஸ்லிம்களுக்கு குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும்; முஸ்லிம்களை கொலை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட வெறுப்பு பேச்சுகள் அதிகரித்து வருகின்றன.
"இந்தியா வர வேண்டாம்"
இந்நிலையில், லாலு பிரசாத் கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தள மூத்த தலைவரும், முன்னாள் பீகார் அமைச்சருமான அப்துல் பாரி சித்திக்கி, பாட்னாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "எனது மகன் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கிறார். எனது மகள் லண்டனில் படிப்பை முடித்திருக்கிறார். அவர்களிடம் நான் சொன்னது ஒன்றே ஒன்றுதான். அது இந்தியா வர வேண்டாம் என்பதுதான்.
"முஸ்லிம்களுக்கு எதிரான பாரபட்சம்"
நான் அப்படி கூறியதும் அவர்கள் ஏன் எனக் கேட்டனர். இந்தியாவில் இப்போது சூழல் சரியாக இல்லை. முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக மிகப்பெரிய பாரபட்சம் காட்டப்படுகிறது. எனவே, அங்கேயே வேலை தேடுங்கள். முடிந்தால் அங்கேயே 'செட்டில்' ஆகிவிடுங்கள் எனக் கூறியிருக்கிறேன். யோசித்து பாருங்கள்.. ஒருவன் தனது பிள்ளைகளிடம் சொந்த நாட்டிற்கு வராதீர்கள் எனக் கூறுவது எவ்வளவு கடினமானதாக இருக்கும். ஆனால் எனக்கு வேறு வழி தெரியவில்லை" என அப்துல் பாரி சித்திக்கி கூறினார்.
"பாகிஸ்தானுக்கு செல்லுங்கள்"
இந்நிலையில், அப்துல் பாரி சித்திக்கின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நிக்கில் ஆனந்த் கூறுகையில், "சித்திக்கின் பேச்சானது இந்தியாவுக்கு எதிரானது. இந்தியாவில் இருப்பது மிகவும் கஷ்டம் என நினைத்தால், ஒரு அரசியல் தலைவராக அவர் இங்கு அனுபவிக்கும் சலுகைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். மேலும், தனது குடும்பத்துடன் பாகிஸ்தானில் குடியேறட்டும். அவரை யாரும் தடுக்கப்போவதில்லை. ராஷ்ட்ரிய ஜனதா தளம் முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் அரசியலை மட்டுமே செய்து வருகிறது. அவரது பேச்சு அக்கட்சியின் கலாச்சாரத்தை தான் எடுத்துக்காட்டுகிறது. பாஜகவிடம் இருந்து அதை எதிர்பார்க்க முடியாது" என நிக்கில் ஆனந்த் கூறினார்.