"தீரன்" சினிமா போல.. நெட் முறைகேடு விசாரித்த சிபிஐ அதிகாரிகள்- கொடூரமாக தாக்கிய பீகார் கிராமவாசிகள்!
பாட்னா: உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வு முறைகேடுகளை விசாரிக்கச் சென்ற சிபிஐ அதிகாரிகளை பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும் பீகார் மாநில கிராமவாசிகள் ஓட ஓட விரட்டித் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வு அண்மையில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த தேர்வு நடைபெற்ற மறுநாளே தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு முறைகேடுகள் தொடர்பாக சிபிஐ விசாரிக்கும் என மத்திய அரசு அறிவித்தது.

இதேபோல நீட் நுழைவுத் தேர்வுகள் மே 5-ந் தேதி நடத்தப்பட்டு ஜூன் 4-ந் தேதி முடிவுகள் வெளியாகின. நீட் நுழைவுத் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்தவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டனர்.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்த விவகாரம் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கிறது. இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை பல மாநிலங்களைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் குறித்த வழக்குகளையும் சிபிஐ வசம் ஒப்படைத்தது மத்திய அரசு.
இந்த நிலையில் நெட் தேர்வு முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் குழு பீகார் மாநிலத்தின் நவாடா கிராமத்துக்குச் சென்றது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிபிஐ அதிகாரிகளின் வாகனத்தை அப்படியே சூழ்ந்து கொண்டனர். அத்துடன் சிபிஐ அதிகாரிகளின் வாகனத்தையும் அடித்து உடைத்தனர். சிலர் சிபிஐ அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
பின்னர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து வந்த சிபிஐ அதிகாரிகளை கிராம மக்களிடம் இருந்து மீட்டு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தீரன் அதிகாரம் என்ற திரைப்படத்தில் கொள்ளையர்களைப் பிடிக்க வட இந்திய கிராமத்துக்கு செல்லும் கார்த்தி தலைமையிலான போலீஸ் அதிகாரிகளை சூழ்ந்து கொண்டு கிராம மக்கள் தாக்கும் காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்தும். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் பீகாரில் நடந்துள்ளது.












Click it and Unblock the Notifications