"ரயில்வேயை அழித்துவிட்டார்கள்.." ஒடிசா ரயில் விபத்து.. டென்ஷனான லாலு பிரசாத் யாதவ்! கடும் தாக்கு
பாட்னா: ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி விபத்து குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ள முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இது தொடர்பாக வேறு சில தகவல்களையும் பகிர்ந்து கொண்டார்.
நேற்றைய தினம் ஒடிசா மாநிலத்தில் கொடூரமான ரயில் விபத்து நடந்தது. அங்கு மூன்று ரயில்கள் மோதி விபத்திற்குள்ளான நிலையில், இதற்கு உலகெங்கும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்தச் சம்பவத்தில் இதுவரை 261 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. மேலும், 800க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் அருகே உள்ள மருத்துவமனைகளில் அட்மிட் செய்யப்பட்டுள்ளனர்.
நேற்று கொல்கத்தாவில் இருந்து கிளம்பிய கோரமண்டல் ரயில் பாலசோர் மாவட்டத்தில் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே வந்த போது விபத்து நடந்துள்ளது. இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை.. இருப்பினும், கோரமண்டல் ரயில் முதலில் சரக்கு ரயிலில் மோதி தடம் புரண்டதாகச் சொல்லப்படுகிறது. தடம் புரண்ட பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அங்கே வந்த யஸ்வந்த்பூர்-ஹவுரா ரயிலும் அதில் மோதியுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கருதப்படுகிறது. இதற்கிடையே இந்த ரயில் விபத்து குறித்து முன்னாள் ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது 3 ரயில்கள் மோதிய இந்த விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் லாலு பிரசாத் யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
பாஜக தலைமையிலான மத்திய அரசை அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் அலட்சியமே இந்த விபத்திற்குக் காரணம் என்று சாடினார். லாலு பிரசாத் யாதவ் மேலும் கூறுகையில், "அவர்கள் காட்டிய அலட்சியம்.. போதிய விழிப்புணர்வைக் காட்டாத விதம் தான் உயிரிழப்புகள் இந்தளவுக்கு அதிகரிக்கக் காரணமாக இருந்துள்ளது.
இது குறித்து உயர்மட்ட விசாரணை அமைக்க வேண்டும்.. இந்த விபத்திற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்... ரொம்பவே அலட்சியம் இருந்துள்ளனர். அவர்கள் ரயில்வேயை முற்றிலுமா அழித்துவிட்டனர்" என்று கடுமையாகச் சாடினார்.
நேற்று மாலை நடந்த இந்த விபத்தில் 261 பேர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தோர் அருகே உள்ள கோபால்பூர், காந்தபாரா, பாலசோர், பத்ரக் மற்றும் சோரோ ஆகிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த விபத்து தொடர்பாக டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூட்டமும் நடைபெற்றது.
ரயில் பெட்டிகளின் தண்டவாளத்தில் இருந்து சற்று தொலைவு வரை தூக்கி எறியப்பட்டுள்ளது.. மேலும், சில பெட்டிகள் நசுக்கப்பட்டும் முழுவதுமாக சிதிலமடைந்தும் இருக்கிறது. இது விபத்து எந்தளவுக்குக் கொடூரமாக இருந்தது என்பதையே காட்டுகிறது. ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் பஹனகா பஜார் நிலையத்தில் மாலை 7 மணியளவில் விபத்து நடந்த நிலையில், விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்துள்ளன.
முன்னதாக மீட்புப் பணி முடிந்து சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் கூறியிருந்தார்.












Click it and Unblock the Notifications