பெரம்பலூரில் திருமணத்திற்கு சென்ற கணவன் மனைவி.. எமனாக வந்த டிப்பர் லாரி.. நொடிப்பொழுதில் சோகம்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே இருசக்கர வாகனத்தில் திருமண விழாவிற்கு சென்ற தம்பதி, லாரி மோதியதில் சம்பவ இடத்தலேயே உயிரிழந்தனர்.
பெரம்பலூர் அருகே எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிச்சை என்பவருடைய மகன் கோவிந்தராஜ் . இவருக்கு வயது 24 ஆகிறது. இவர் லாரி டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கும், சேலம் மாவட்டம், நாவலூரை சேர்ந்த சேகரின் மகள் ரேணுகாவுக்கும்(21) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்திருக்கிறது. இந்த தம்பதிக்கு 1¼ வயதில் சுகாஷினி என்ற பெண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில் கோவிந்தராஜ் திருச்சி மாவட்டம் பண்ணக்காரன்பட்டியில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் நள்ளிரவு மனைவி ரேணுகாவை மோட்டார் சைக்கிளில் அழைத்து கொண்டு புறப்பட்டு சென்றுள்ளார். அவர்கள் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையையும், பெரம்பலூர்-துறையூர் மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் புறவழிச்சாலையில் உள்ள தனியார் வேளாண்மை கல்லூரி எதிரே சென்று கொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது, அந்த வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று பயங்கர வேகத்தில் மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் கோவிந்தராஜும், ரேணுகாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், கணவன் மனைவி இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. அடையாளம் தெரியாத லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையை பொறுத்தவரை நள்ளிரவு நேரங்களில் இருசக்கர வாகனத்தில் செல்வது அபாயகரமான ஒன்றாக உள்ளது. ஏனெனில் அசுர வேகத்தில் வரும் பெரிய வாகனங்கள் சாலையேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகளை கவனிக்காமல் விபத்தை ஏற்படுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதுஒருபுறம் எனில் நள்ளிரவு நேரங்களில் சாலைகளில் பள்ளம் இருந்தால் தெரிவது இல்லை.இதுவும் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது.












Click it and Unblock the Notifications