பெரம்பலூரில் அதிமுக பிரச்சாரம்… பட்டாசு வெடித்ததில் டீக்கடை தீக்கிரையானது
பெரம்பலூர்: அதிமுக பிரச்சாரத்தின் போது பட்டாசு வெடித்ததில் டீக்கடை மற்றும் 6 குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரசேகர், பெரம்பலூர் மாவட்டத்தில் சித்தளி, கீழப்பெரம்பலூர் உள்ளிட்ட கிராமங்களில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அவருடன் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன், முன்னாள் துணை சபாநாயகர் வரகூர் அருணாச்சலம் உள்ளிட்டோர் இருந்தனர். கீழப்பெரம்பலூர் கிராமத்தில் ஓட்டு சேகரிக்க சென்ற வேட்பாளரை வரவேற்க அக்கிராமத்தைச் சேர்ந்த அதிமுகவினர் பட்டாசு வெடித்தனர்.
அப்போது அருகில் இருந்த டீக்கடையில் பட்டாசு நெருப்பு சிதறி விழுந்தது. இதில் திடீரென கடை தீப்பிடித்து எரிந்தது. காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால், தீ மளமளவென மற்ற பகுதிகளுக்கு பரவியது.
இதில், அருகில் இருந்த 6 குடிசை வீடுகள் தீப்பிடித்து எரிந்தன. வீட்டில் இருந்த டிவி, கிரைண்டர், வீட்டு உபயோக பொருட்கள் என எரிந்து நாசமாகின.
இதுகுறித்து தகவலறிந்து வந்த திட்டக்குடி தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். குன்னம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications