ஜூராசிக் பார்க் - பெரம்பலூரில் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டயனோசர் முட்டைகள் கண்டெடுப்பு
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசர்களின் நூற்றுக்கும் மேற்பட்ட முட்டைகள் உள்ளிட்ட ஏராளமான கடல் வாழ் உயிரினங்களின் படிமங்கள், ஒரே இடத்தில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பெரம்பலூர் அருகே குன்னம் பெரிய ஏரியில் நேற்று மண் எடுத்து கொண்டிருந்தபோது, அம்மோனைட் எனப்படும், கடல்வாழ் நத்தைகளின் படிமங்களும் சிதைவுற்ற நிலையில் கிடைத்துள்ளது. மேலும் அந்த ஏரியில் டைனோசர் முட்டை போல் பெரிய உருண்டை வடிவிலான படிமங்கள் கிடைத்துள்ளன.
அந்த படிமங்களை புவியியல் ஆய்வாளர் வந்து பார்வையிட்டு, அது டைனோசர் முட்டையா?, இல்லையா? என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த டைனோசர் முட்டைகள் மாமிச கார்னோட்டாரஸ் மற்றும் இலைகள் மட்டும் உண்ணும் சைவ சவுரபோட் டைனோசரின் முட்டைகளாக இருக்கலாம் என கூறப்படுகிறது. டைனோசர் முட்டைகளாக இருந்தால் இது சுமார் 12 கோடி முதல் 14 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்லியல் துறை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குன்னம் கிராமத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள கல்படிமங்களை அதே இடத்திலும் பாதுகாத்தும், சிலவற்றை அதன் அருகிலுள்ள பள்ளிகளிலும் சேகரித்து வைத்தும் உள்ளூர் அளவிலான காட்சியகங்கள் ஏற்படுத்தி பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கல்படிமங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பகுதிகளை தொல்லியல் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று சமுக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.