ஸ்டாலினின் சர்ப்ரைஸ்.. அரசு பஸ்களில் வந்தது அதிரடி.. டபுள் குட்நியூஸ் தந்த தமிழக அரசு.. இனி நிம்மதி
பெரம்பலூர்: தமிழக போக்குவரத்து துறை 2 விதமான மகிழ்ச்சி செய்தியை தெரிவித்திருக்கிறது.. அது என்ன?
தமிழகத்தில் இயங்கிவரும் 52 சதவீதம் பஸ்கள், இன்னமும் பழைய பஸ்களாகவே உள்ளதுடன், பல பஸ்களில் மேற்கூரை உடைந்து தொங்குவது, ஓட்டை விழுந்து மழைநீர் ஒழுகுவது தொடர்கதையாகி வருகிறது.
அந்தவகையில், தமிழக அரசு பேருந்துகள் தரமின்றி செயல்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.. குறிப்பாக, திருச்சி, விருதுநகர், நாகை போன்ற மாவட்டங்களில் அரசு பஸ்கள் சேதமாகியதுடன், நாற்காலியுடன் சாலையில் விழுந்த வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தன.

புதிய பஸ்கள்: அதுமட்டுமல்ல, அரசு போக்குவரத்து கழகங்களில் 6 ஆண்டுகள் தாண்டிய, பஸ்களை எல்லாம் உடனடியாக மாற்ற வேண்டும் என்றும் புதிய பஸ்களை வாங்கி இயக்கப்பட வேண்டும் என்றும், பேருந்துகளை பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும், போக்குவரத்து கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸும் வலியுறுத்தியிருந்தார்.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பேருந்துகளையும் அடுத்த 48 மணி நேரத்துக்குள் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பழுதடைந்தவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றும் போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.. அதன்படியே அதிகாரிகளும் தமிழகம் முழுவதும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.
கொள்முதல்: இந்நிலையில், தமிழக போக்குவரத்துத்துறை 7,030 புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளதாக கடந்த மே மாதம் செய்திகள் வெளியாகியிருந்தன.. அதாவது, 6 மாநில போக்குவரத்து கழகங்களில் மொத்தம் 20,260 பேருந்துகள் உள்ளன. இதில், 10,582 பேருந்துகள் மிகவும் பழமையானவையாக உள்ளன. மேலும் இப்போதுள்ள பேருந்துகளின் சராசரி வயது 9 வருடங்கள் என்று போக்குவரத்துத் துறை சொல்கிறது.
ஏற்கனவே, 2022-23, 2023-24 நிதியாண்டுகளில் தலா 1000 புதிய பேருந்துகளும் 2024-25 நிதியாண்டில் இதுவரை 3 ஆயிரம் புதிய பேருந்துகளும் கொள்முதல் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2666 பேருந்துகள் ஜெர்மனியைச் சேர்ந்த வங்கியின் நிதியுதவி மூலம் வாங்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதற்கான பணிகள் துரிதமாக நடந்துவருவதாகவும் கூறப்படுகிறது.
பெரம்பலூர்: இப்படிப்பட்ட சூழ்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், 2 மகிழ்ச்சிகரமான செய்தியை தெரிவித்துள்ளார்.. பெரம்பலூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் புதிதாகவாங்கப்பட்டுள்ள பஸ்களில், ஆம்னி பேருந்துகளில் இருப்பதை போலவே, செல்போன் சார்ஜ் வசதி, படுக்கை வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, அரசின் நிர்வாகம் தெரியாமல் பேசுகிறார். இப்போது 600-க்கும் மேற்பட்டோர், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதைதவிர, புதிதாக 7,500 பேருந்துகள் வாங்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அப்படியிருக்கும்போது, அரசு போக்குவரத்துக் கழகத்தை எப்படி தனியார்மயமாக்க முடியும்?
நிதி ஒதுக்கீடு: இலவச பயணங்களுக்காக போக்குவரத்துத் துறைக்கு, தமிழக முதலமைச்சர் நிதி ஒதுக்கி வருகிறார். அந்த வகையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு நடப்பாண்டு ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால்தான், போக்குவரத்து தொழிலாளர்கள் மாதந்தோறும் 1-ம் தேதி ஊதியம் பெற்று வருகிறார்கள.
அரசுப் பஸ்களில் கட்டண உயர்வு என்பது இப்போதைக்கு கிடையாது. இதர மாநிலங்களில் டீசல், பெட்ரோல் விலை உயரும் போதெல்லாம், பஸ் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தாமலேயே, போக்குவரத்துக் கழகத்தை நடத்துமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்" என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.
டபுள் மகிழ்ச்சி: ஏற்கனவே 7000 பஸ்கள் வாங்க போவதாக சொல்லப்பட்ட நிலையில், இப்போது புதிதாக 7,500 பஸ்களை தமிழக அரசு வாங்குவதுடன், இனி பஸ் கட்டணமும் உயர்த்தப்பட மாட்டாது என்று தெரிவித்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தமிழக மக்களுக்கு தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications