பா.ஜ.கவுக்கு அடிமையாக இல்லை; நல்ல திட்டங்கள் கொண்டு வர இணக்கமாக உள்ளோம்.. எடப்பாடியார் விளக்கம்!
பெரம்பலூர்: இந்த தேர்தலுடன் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் பல பொய்களை கூறினார். ஆனால் தற்போது மக்கள் விவரமாக உள்ளனர் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார். அதிமுக அடிமையாக இல்லை. மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றும் முதல்வர் தெரிவித்தார்.

முதல்வர் சூறாவளி பிரசாரம்
தமிழக தேர்தல் களம் அரசியல் கட்சி தலைவர்களின் பிரசாரத்தால் சுட்டெரிக்கும் வெயிலை விட சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

மக்கள் விவரமாக உள்ளனர்
அரியலூர், பெரம்பலூர் மற்றும் விருத்தாசலத்தில் பிரசாரத்தில் மேற்கொண்ட எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:- இந்த தேர்தலுடன் திமுகவின் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். விவசாயப் பணியில் இருந்து படிப்படியாக உயர்ந்து வருகிறேன். தற்போது நீங்கள் தந்த பதவி முதல்வர். ஸ்டாலின் மக்களவைத் தேர்தலில் பல பொய்களை கூறினார். ஆனால் தற்போது மக்கள் விவரமாக உள்ளனர்.

அடிமை இல்லை
கூட்டணி விஷயத்தில் பாஜக, காங்கிரஸ் என கூடுவிட்டு கூடு பாய்கிறது திமுக. 10 ஆண்டுகள் வனவாசத்தில் இருந்தும் திமுக திருந்தவில்லை. ஸ்டாலின் முதல்வர் கனவில் இருக்கிறார். ஆனால் அவர் கனவு பலிக்காது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்.அதிமுக, பாஜகவுக்கு அடிமையாக இருப்பதாக ஸ்டாலின் கூறுகிறார்.

திட்டங்களை கொண்டு வருகிறோம்
அதிமுக அடிமையாக இல்லை. மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வர பாஜகவுடன் இணக்கமாக இருக்கிறோம்.ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் போல மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றினால்தான் தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை கொண்டுவர முடியும்.












Click it and Unblock the Notifications