"அப்பா நான் டாக்டர் ஆகிட்டேன்.. நேரில் வந்து சொல்ல முடியலை".. அதற்குள் பறிபோன உயிர்.. பரிதாப அகிலா
பயிற்சி மருத்துவர் அகிலா சாலை விபத்தில் உயிரிழந்தது சோகத்தை தந்துள்ளது
பெரம்பலூர்: "அப்பா நான் டாக்டர் ஆகிட்டேன்" என்று சொல்வதற்காக அகிலா இதுவரை காத்து கிடந்த நொடிகள் ஏராளம்.. கையில் டாக்டர் சர்ட்டிபிகேட் கிடைத்ததும் இந்த விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்திருந்த கடைசி நேரத்தில்தான், டாக்டர் அகிலாவின் உயிர் சாலை விபத்தில் அநியாயமாக பறிபோனது!
பெரம்பலூரை சேர்ந்தவர் தமிழ்மணி.. இவர் ஒரு டெய்லர்.. ஒரே மகள் அகிலா.. 23 வயதாகிறது.. மகளை கஷ்டப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்க வைத்தார் தமிழ்மணி.
பிறகு அகிலா கடந்த ஒரு வருஷமாக ஹவுஸ் சர்ஜினாக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில்தான் வேலை பார்த்து வந்தார்.. கடந்த மார்ச் 28-ந் தேதியுடன் பயிற்சி டாக்டர் பணி முடிந்தது.. எனினும், தற்போது கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க, அவரது பணி மேலும் ஒரு மாசம் நீட்டித்து உத்தரவிடப்பட்டது.

பயிற்சி மருத்துவர்
அதனால், அதே ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் பணியாற்றி வந்தார்.. பயிற்சி முடித்ததற்கான தன்னுடைய சர்ட்டிபிகேட்டை வாங்க வேண்டி இருந்தது.. அதற்காக அகிலா சக பயிற்சி டாக்டருமான பிரபஞ்சன் என்பவரை அழைத்து கொண்டு பூவந்தியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பைக்கில் சென்றார். பிரபஞ்சன் குடியாத்தத்தை சேர்ந்தவர்.. அவருக்கும் வயது 23 தான்.

நண்பர்
சர்டிபிகேட்டை வாங்கி கொண்டு திரும்பவும் சிவகங்கையை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிரே இன்னொரு பைக் வேகமாக வந்தது.. அந்த பைக்கை கருப்பணன் என்பவர் ஓட்டி வந்தார். என்ன ஆனது என்றே தெரியவில்லை. 2 பைக்குகளும் எதிரெதிரே பலமாக மோதி கொண்டன.. இதில் பிரபஞ்சன், அகிலா, கருப்பணன் 3 பேருமே பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் போராடினர்.

விசாரணை
இதை பார்த்த பொதுமக்கள் அவர்களை மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஆனால் தீவிரமான சிகிச்சை அளித்தும் பலனின்றி அகிலா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக பூவந்தி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அகிலாவின் மரண செய்தியை கேட்டு ஆஸ்பத்திரி டீன், டாக்டர்கள், சக மாணவர்கள், கண்ணீர் வடித்தனர்.. விஷயத்தை கேள்விப்பட்டு சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், நேரடியாக ஆஸ்பத்திரிக்கு வந்து அகிலாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.. இதன்பிறகுதான் அவரது உடல் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்
தமிழ்மணி மகளை கஷ்டப்பட்டுதான் டாக்டருக்கு படிக்க வைத்துள்ளார்.. அகிலா சின்ன வயசில் இருந்தே நன்றாக படிப்பவராம்.. அதனால்தான் பிளஸ் 2வில் நல்ல மார்க் எடுத்து எம்பிபிஎஸ் சீட்டும் கிடைத்துள்ளது.. அந்த சர்டிபிகேட்டை வாங்கிய பிறகுதான், கோர்ஸ் முடிந்துவிட்டது என சந்தோஷமாக வீட்டில் சொல்ல நினைத்திருந்தாராம் அகிலா.. ஆனால் அதற்குள் உயிர் பிரிந்துவிட்டது.. பாடுபட்டு படித்த அகிலாவின் முயற்சியும், தந்தையின் உழைப்பும் வீணாய் சிதறி போய்விட்டது!!












Click it and Unblock the Notifications