பெரம்பலூர் வரும் மோடி! பாரிவேந்தருக்கு சர்ப்ரைஸ் தந்த அண்ணாமலை!
பெரம்பலூர்: பாரிவேந்தரை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காகப் பிரதமர் மோடி பெரம்பலூர் வர உள்ளார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
1952இல் இருந்தே பெரம்பலூர் தொகுதி பொதுத் தேர்தலைச் சந்தித்து வருகிறது. இதற்குள் பெரம்பலூர் (தனி), குளித்தலை, லால்குடி, துறையூர் (தனி), முசிறி, மண்ணச்சநல்லூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கி உள்ளன.

ஒரு காலத்தில் திமுக முன்னாள் தலைவர் மு.கருணாநிதி நின்று வெற்றி பெற்ற தொகுதியான குளித்தலை இதற்குள்ளாகவே வருகிறது. அப்படி ஒரு பாரம்பரியம் கொண்ட தொகுதி இந்தப் பெரம்பலூர்.
இதுவரை 17 பொதுத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது பெரம்பலூர். அதில் திமுக 7 முறை வெற்றி பெற்றுள்ளது. அதிமுக 6 முறை வென்றுள்ளது. காங்கிரஸ் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது.
திராவிட இயக்கத் தலைவர்களில் குறிப்பிடத்தக்கவரான இரா.செழியன் இந்தத் தொகுதியில் 1962இல் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் 2009இல் திமுக சார்பில் நடிகர் நெப்போலியன் ஒருமுறை வெற்றி பெற்றுள்ளார். ஆ.ராசா 3 முறை வென்ற தொகுதியும் இதுதான். இவருக்கு இணையாக அதிமுக அசோக்ராஜ் 3 முறை வென்றுள்ளார்.
ஐஜேகே கட்சியைத் தொடங்கியது முதல், பாரிவேந்தர் மொத்தம் 3 முறை இந்தத் தொகுதியில் வேட்பாளராகக் களம் கண்டுள்ளார். அதில் 2019இல் 6.84 லட்சம் வாக்குகளைப் பெற்று அமோக வெற்றியடைந்தார்.
இந்தமுறை பாரிவேந்தர் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதற்காகப் பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய ஊர்களில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் வாக்குகளைச் சேகரித்து வருகிறார்.
இந்தப் பெரம்பலூர் தொகுதிக்குட்பட்ட தேவேந்திரகுல வேளாளர் சமுதாய மக்கள் ஒரு பொதுக்கூட்டத்தை ஒருங்கிணைத்தனர்.
அதில் கலந்து கொண்ட பாரிவேந்தர், பட்டியல் வகுப்பிலிருந்து இந்த மக்கள் தங்களை வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆகவே அவர்களுக்கான உரிமை மீட்டுத் தருவது தொடர்பாக தன்னால் முடிந்தவரைப் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் பாரிவேந்தரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்குச் சேகரித்தார். முன்னதாக பெரம்பலூர் நான்கு ரோடு,பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம்
வழியாகக் கூட்டணிக் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாகச் சென்று அவர் வாக்குச் சேகரித்தார்.
அப்போது பேசிய அண்ணாமலை, "பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரயில் திட்டம் கண்டிப்பாகக் கொண்டுவரப்படும். அதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் நடந்து கொண்டிருக்கிறது" என்றார்.
மேலும்"நேர்மையால், உண்மையால், மக்கள் சிந்தனையால், உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர். சாதாரண ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, இன்று உலக அளவில் சிறந்து விளங்கும் மாபெரும் கல்வி நிறுவனத்தைத் தனது கடும் உழைப்பால் உருவாக்கியவர்.
அவர் சம்பாதித்த பணத்தைத் தொகுதி மக்களுக்குச் செலவழித்து வருவது பெருமையாக இருக்கிறது. இந்தமுறை பாரிவேந்தர் வெற்றிபெற்றால் பெரம்பலூர் தொகுதியில் உள்ள 1,500 குடும்பங்களுக்கு, தலா 10 லட்சம் ரூபாய் மதிப்பில் உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கத் திட்டங்கள் வைத்துள்ளார்.
மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவரை முதன்முதலாகத் தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் பாரிவேந்தர். அதை என்றும் மறக்கவே முடியாது" எனச் சுட்டிக் காட்டிய அண்ணாமலை, பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார்.
தாமரை சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக, ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக்கொடுத்து வேலை பார்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

பெண்களை அவமானப்படுத்தும் திமுகவின் வேட்பாளர்கள் நமக்கு வேண்டாம் எனவும் உண்மையான மனிதர் பாரிவேந்தரை வெற்றிபெறச் செய்வது நமது கடமை என்றும் அண்ணாமலை பேசினார்.
திமுக சார்பில் பெரம்பலூரில், அமைச்சர் நேருவின் மகன் போட்டியிடுகிறார். வாரிசு அரசியலைத் தவிர திமுகவுக்கு வேறொன்றும் தெரியாது. திமுக ஆட்சிக்கு வந்து கடந்த 33 மாதங்களில், கொடுத்த 511 தேர்தல் வாக்குறுதிகளில் 20 வாக்குறுதிகளைக் கூட முழுமையாக நிறைவேற்றவில்லை.
அதேபோல, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், திமுகவுக்கு வாக்களிப்பதால் பெரம்பலூர் தொகுதிக்கு எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை" என்று அண்ணாமலை கூறினார்.












Click it and Unblock the Notifications