உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்கணும்னா திருமாவளவன் ஆர்எஸ்எஸ், பாஜகவை ஆதரிக்கணும் - வானதி சீனிவாசன்
பெரம்பலூர் : உண்மையிலேயே தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்றால், சத்தமில்லாமல் தீண்டாமையை ஒழிக்கப் பாடுபடும் ஆர்.எஸ்.எஸ், பாஜக போன்ற இயக்கங்களை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும் என பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
திருமாவளவன் யாரை திருப்தி படுத்துவதற்காக, எதைப் பெறுவதற்காக இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும், திமுகவின் முன்னணி தலைவர்கள் இந்து மதத்தைப் புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பேசி வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார் வானதி சீனிவாசன்.
திமுக அரசு ஒரு தரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

வானதி சீனிவாசன்
தீண்டாமை ஒழிப்பில் சிறப்பாக செயல்பட்டு வரும் ஆர்எஸ்எஸ், பாஜகவை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். பெரம்பலூரில் பாஜக தகவல் தொழில்நுட்ப அணியின் தரவு மேலாண்மை பிரிவினருக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல்.ஏ.வுமான வானதி சீனிவாசன் பங்கேற்றார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,

திமுகவின் இந்து மத வெறுப்பு
திமுக தலைவர் உட்பட அக்கட்சியின் முன்னணி தலைவர்கள் அனைவரும் இந்து மத நம்பிக்கைகளை புண்படுத்தும் செயல்களில் தொடர்ந்து ஈடுபடுகின்றனர். இதுகுறித்து புகார் கொடுத்தாலும், திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை. சமீபத்தில், சிதம்பரம் நடராஜர் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறாக பேசியவர்கள் மீது புகார் கொடுத்தும், அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஒரு தரப்புக்கு எதிரானது திமுக அரசு
இதுபோல், இந்து மத நம்பிக்கைகள் பற்றி அவதுாறாகப் பேசுபவர்களுக்கு மறைமுகமாக, பின்னணியில் ஆதரவு கொடுக்கும் அரசாக இந்த அரசு உள்ளது. இதனால், திமுக அரசு ஒரு தரப்பு மக்களுக்கு எதிரானது என்பதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வருகிறோம்.

இரட்டை வேடம்
போதைப் பொருள் ஒழிப்பு குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் மிகவும் தீவிரமாகப் பேசி வருகிறார். ஆனால், மறுபுறம் டாஸ்மாக் கடைகள் மூலம் திமுக அரசே வீதிக்கு வீதி மது விற்பனை செய்கிறது. இது திமுக அரசு போடும் இரட்டை வேடத்தையே காட்டுகிறது.

திருமாவளவனின் நோக்கம்
திருமாவளவனின் இலக்கு எப்போதும், இந்து கோயில்கள் மற்றும் இந்துக்களின் நம்பிக்கைகள் மட்டும்தான். இதர மத நம்பிக்கைகளை, செயல்பாடுகளை அவர் கண்டுகொள்ள மாட்டார். திருமாவளவன் யாரை திருப்தி படுத்துவதற்காக, எதைப் பெறுவதற்காக இந்து மதத்தை தொடர்ந்து விமர்சித்து வருகிறார் என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.

ஆர்எஸ்எஸ்ஸை ஆதரிக்க வேண்டும்
தீண்டாமை ஒழிக்கப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு மாற்றுக்கருத்து இல்லை. தீண்டாமையை ஒழிப்பதில் ஆர்எஸ்எஸ், பாஜக போன்ற இயக்கங்கள் சத்தமில்லாமல் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. எனவே, தீண்டாமையை ஒழிக்க வேண்டுமென்றால் ஆர்எஸ்எஸ், பாஜகவை திருமாவளவன் ஆதரிக்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications