கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் சொத்து: அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவது பாவச்செயல்: நீதிபதி வேதனை
கோயில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாதமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 1960 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன், அந்த சொத்துக்கான வாடகையை 17,200 ரூபாயாக உயர்த்தி 2016 ஆம் ஆண்டு கோயில் நிர்வாகம் பிறப்பித்த உத்தரவை நீக்கக் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, இதுவரை 1 லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளதாகவும் அதை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கோயில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், 1960 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குத்தகை 5 ஆண்டுகளில் முடிந்துவிட்ட நிலையில், தற்போது மனுதாரர் ஆக்கிரமிப்பாளர் தான் என்பதால், அவரது கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மூன்று மாதங்களில் மனுதாரரை கோயில் நிலத்தில் இருந்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கு மட்டுமல்லாமல், அறநிலைய தொடர்புடைய பல்வேறு வழக்குகளிலும், கோயில் சொத்துக்களின் வாடகை முறையாக வசூலிப்பதில்லை என்றும், அதிகாரிகளும், அறங்காவலர்களும் கைகோர்த்து செயல்பட்டு, சட்டவிரோத ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக என நீதிபதிஅதிருப்தியை தெரிவித்தார்.
கோயில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டுமென்ற பெரிய எதிர்பார்ப்புகளுடன் பல உன்னத ஆத்மாக்கள், தங்கள் சம்பாத்தியத்தை மத வழிபாட்டு தலங்களுக்கு தானமாக எழுதி வைத்துள்ளதாகவும், அவர்களின் விருப்பத்தை கவுரவப்படுத்தாமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என்றும், அந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள தெய்வங்களின் உரிமைகள் மீறப்படுவதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications