புதுவை.. சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்று நீரில் மூழ்கி இரு சிறுவர்கள் பலி
புதுவை: புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள சங்கராபரணி ஆற்றில் மீன் பிடிக்க சென்றபோது நீரில் மூழ்கிய 2 சிறுவர்கள் உயிரிழந்துவிட்டனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உறுவையாறு வெங்கட்டா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் ராமு (18). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜின் மகன் தேவகுரு (11), உறுவையாறு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (9), பாகூர் மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்த ஹரிகரபிரியன்(13) ஆகிய 4 பேரும் வில்லியனூர் ஆச்சாரியாபுரம் பகுதியில் சங்கராபரணி ஆற்றுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
அப்போது ராமு ஆற்றில் தூண்டில் போட்டு மீன் பிடித்துக் கொண்டிருந்தார். மீன் அகப்படாத நிலையில் தேவகுரு, சஞ்சய், ஹரிகரபிரியன் ஆகிய 3 பேரும் ஆற்றில் இறங்கி குளித்துள்ளனர்.

கரை
ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்ற அவர்கள் சேற்றில் சிக்கிக் கொண்டு நீரில் மூழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமு ஆற்றில் குதித்து தேவகுரு, ஹரிகரபிரியன் ஆகிய இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.

மயக்க நிலை
அதில் ஹரிகரபிரியன் மயக்க நிலையில் இருந்தார். சஞ்சய் மாயமானார். இதையடுத்து ராமு அங்கிருந்தவர்கள் உதவியுடன் ஹரிகரபிரியனை வில்லியனூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சஞ்சய்
பின்னர் இது தொடர்பாக மங்கலம் போலீஸார் மற்றும் வில்லியனூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மாயமான சஞ்சயை தேடிய நிலையில் அவர் சடலமாக மீட்கப்பட்டார்.

மருத்துவக் கல்லூரி
இதையடுத்து ஹரிகரபிரியன், சஞ்சய் ஆகிய இருவரின் உடலையும் போலீஸார் பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து மங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications