ஆபத்தாக மாறிய ஆனந்தகுளியல்.. புதுச்சேரி கடலில் மாயமான 4 பேர்.. இழுத்து சென்ற ராட்சத அலை - சோகம்
புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுகம் கடலில் இன்று குளித்த 2 சிறுமிகள் உள்பட 4 பேர் மாயமாகினர். திடீரென்று வந்த ராட்சத அலையில் அவர்கள் சிக்கிய நிலையில் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணிக்கு 2023ம் ஆண்டு விடைபெற்று 2024 புத்தாண்டு பிறக்க உள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு மக்கள் தயாராகி வருகின்றனர். பொதுவாக புதுச்சேரியில் ஒவ்வொரு ஆண்டும் புத்தாண்டு என்பது களைகட்டும்.

அங்கு புதுச்சேரி மட்டுமின்றி தமிழ்நாடு உள்பட பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று இரவு புத்தாண்டு கொண்டாட ஏராளமானவர்கள் புதுச்சேரியில் குவிந்து வருகின்றனர்.
இதற்கிடையே தான் புத்தாண்டு கொண்டாட வரும் மக்களின் பாதுகாப்பு தேவையான ஏற்பாடுகளை புதுச்சேரி அரசு செய்துள்ளது. இரவு நேரங்களில் சிலர் மதுபானம் அருந்தி கடலில் குளிப்பதால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் கடல்பகுதிக்குள் மக்கள் செல்லாமல் தடுக்கும் வகையில் பந்தல் கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கூட இன்று புதுச்சேரி பழைய துறைமுகம் கடலில் 2 சிறுமிகள், 2 சிறுவர்கள் கடலில் இறங்கி குளித்துள்ளனர். அப்போது திடீரென்று வந்த ராட்சத அலையில் அவர்கள் 4 பேரும் சிக்கி கெண்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் கடலுக்குள் மாயமாகினர். இதுபற்றி அறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் அவர்கள் 4 பேரையும் தேடும் பணியை தொடங்கி உள்ளனர்.
மேலும் கடலுக்குள் மூழ்கிய நிலையில் மீனவர்களும் அவர்கள் 4 பேரின் உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டம் இன்று இரவு நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்பே கடலில் குளித்த 2 சிறுவர்கள், 2 சிறுமிகள் என 4 பேரை அலை இழுத்து சென்றது புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications