திருமணமான 6 மாதத்தில் புதுச்சேரியில் காவலர் தூக்கிட்டு தற்கொலை.. போலீஸ் விசாரணை
புதுச்சேரி: புதுச்சேரியில் திருமணமான 6 மாதத்தில் ஐஆர்பிஎன் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி(36). ஐஆர்பிஎன் காவலரான இவர் காவல்துறை தலைமையகத்தில் உள்ள வெடிகுண்டு புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதனிடையே பாலாஜி பணிக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளார்.
இந்நிலையில் கோரிமேடு காவலர் குடியிருப்பு அருகே பாலாஜி தூக்கிட்டு பிணமாக தொங்கிய நிலையில் கிடந்தார். அவ்வழியே நடைபயிற்சி சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனே கோரிமேடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உதவி ஆய்வாளர் இனியன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து பாலாஜி குடும்ப பிரச்சனையால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 6 மாதத்தில் ஐஆர்பிஎன் காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் கேர் நிதியில் இருந்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கு எவ்வளவு பணம் கொடுத்தீங்க? காங். கேள்வி